சென்னை: காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோயிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு காஞ்சிபுரம் வேட்பாளர் சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசனுடன் வந்து தரிசனம் செய்தார். பின்னர், உற்சவர் சித்ரகுப்தர் கர்ணகி அம்மன் முன்பு தனது வேண்டுதலை வெள்ளைத் தாளில் எழுதி வைத்து சிறப்பு பூஜை மேற்கொண்டு 14 கொள்ளு தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: கருத்துக் கணிப்புகள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த 23ம் தேதி தமிழக மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள். நிதர்சனமாக வரும் 4ம்தேதி தீர்ப்பு வரும். புதிதாக ஒரு கட்சி அரசியல் களத்திற்கு வரும்போது தாக்கம் இருக்கும். 2006ம் ஆண்டு தேமுதிக தேர்தலை சந்தித்தது 8.5 சதவீதம் வாக்குகள் பெற்றனர்.
அவர் செல்லுகின்ற இடமெல்லாம் கூட்டம் கூடியது. தேர்தல் கருத்துக்கணிப்பில் கூட அபரிமிதமான வெற்றி பெறுவார், என தெரிவித்தனர். கடைசியில் விஜயகாந்த் ஒருவர் தான் வெற்றி பெற்றார். அடுத்த தேர்தலில் விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்த பிறகு தான் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றார். கூட்டணியில் இருந்து விலகினார் அனைத்தையும் இழந்தார். பல நடிகர்கள் புதிதாக கட்சிகள் துவங்கினாலும், என்றுமே வெற்றி பெற்றதில்லை. அதிமுக வாக்கை பாதித்ததாக சரித்திரம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
