முதல்வராக மு.க.ஸ்டாலின் தொடர்வார் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடர்வார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர் தின நினைவுச் சின்னத்தில், தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.செல்வம், கவுன்சிலர்கள் சுகன்யா செல்வம், பானுப்ரியா உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. தமிழ்நாடு மக்கள் தெளிவாக உள்ளனர். இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது. மக்கள் அளித்துள்ள முடிவை விரைவில் காண்போம். திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி. மக்கள் தீர்ப்பை இந்நேரம் 35 சதவீதம் பேர் படித்திருப்பார்கள். தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடர்வார். எங்களின் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

பிரதமர் மோடிக்கு ஒரு நாக்கு இல்லை. பல நாக்குகள் உள்ளது. ஒரு நாக்கு உள்ளவர் சொன்னதற்கு தான் பதில் சொல்ல முடியும். பல நாக்கு உள்ளவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. மோடி தமிழகம் வரும்போது தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் இலக்கியம் என்று பேசுவார். வட இந்தியா சென்றால் தமிழர்களை விமர்சிப்பார். பீகாரில் தமிழர்களை திட்டினார். ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்பார். மாற்றி மாற்றி பேசுபவர் தான் மோடி. அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தமிழகத்தில் பாசிசத்திற்கும், மத வாதத்திற்கும் எப்போதும் இடமில்லை. அதனால் தான் அவர்கள் இந்த தேர்தலில் படுதோல்வியடைய போகிறார்கள். பேரறிவாளன் வழக்கறிஞரான விவகாரத்தை எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வருகிறார்கள்.

வருமான வரித்துறை சோதனை குறித்து மேலும் ஆதாரங்களை விரைவில் தொடர்ச்சியாக வெளியிடுவேன். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘காங்கிரஸ் எதிர்கட்சியாக இருக்கும், இல்லையென்றால் ஆளுங்கட்சியாக இருக்கும்’ என்று பேசியுள்ளதாக கேட்கிறீர்கள். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பேசலாம். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் சமீபத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். இதற்கு, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே ஆர்.செல்வம், தொழிலாளர் தின நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய பின்னர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.

Related Stories: