புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலில், அதிகபட்சமாக புதுச்சேரியில் 91.81 சதவீத மூன்றாம் பாலினத்தவர் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் மூன்றாம்பாலின வாக்காளர்களில் 60 சதவீதம் பேர் வாக்களித்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாம்பாலினத்தவர்களின் வாக்குப்பதிவு குறித்த புள்ளிவிவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 7,728 மூன்றாம் பாலின வாக்காளர்களில் 60.49 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர்களின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவில் புதுச்சேரி 91.81 சதவீதத்துடன் அதிகபட்ச பதிவை எட்டி முதலிடத்தில் உள்ளது. புதுச்சேரியில் உள்ள 139 மூன்றாம் பாலின வாக்காளர்களில் 91.81 சதவீதம் பேர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். மேற்கு வங்கத் தேர்தலில் இரண்டு கட்டங்களாக மொத்தம் 1,257 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களித்துள்ளனர் – முதல் கட்டத்தில் 465 பேரும், இரண்டாம் கட்டத்தில் 792 பேரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். முதல் கட்ட வாக்குப்பதிவில் இவர்களது வாக்கு சதவீதம் 56.79 சதவீதமாக இருந்த நிலையில், இரண்டாம் கட்டத்தில் இது 91.28 சதவீதமாக பெருமளவு உயர்ந்துள்ளது.
பிற மாநிலங்களைப் பொறுத்தவரை, அசாமில் உள்ள 343 மூன்றாம் பாலின வாக்காளர்களில் 36.84 சதவீதமும், கேரளாவில் உள்ள 277 பேரில் 57.04 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் ‘மூன்றாம் பாலினம்’ பிரிவில் அதிக அளவிலான மக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்ட போதிலும், அவர்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, 2019-ஆம் ஆண்டில் 39,075 ஆக இருந்த மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை, 2024-ஆம் ஆண்டில் 23.5 சதவீதம் அதிகரித்து 48,194 ஆக உயர்ந்தது. ஆனால் அவர்களில் 13,058 பேர், அதாவது 27 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
