×

கோடை விடுமுறையால் கூட்ட நெரிசல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதங்களுக்கு விஐபி டிக்கெட் ரத்து: தேவஸ்தானம் நடவடிக்கை

திருமலை: கோடை விடுமுறை காரணமாக கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். தற்போது கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் பக்தர்களின் தரிசன நேரத்தை குறைக்க திருப்பதி தேவஸ்தானம் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கும் வகையில் புதிய கொள்கையைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோடைக்காலத்தில் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜூலை மாதம் வரை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் விஐபி தரிசனம் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதையும் ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து வரும் 6ம் தேதி நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்பட உள்ளது.
தற்போது சர்வ தரிசன டோக்கன்களை பெற்று வரும் பக்தர்களால், நேரடியாக இலவச தரிசனத்தில் வரிசையில் உள்ள பக்தர்களுக்கு 24 மணி நேரம் ஆகிறது.

இந்நிலையில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதால் தரிசனம் விரைவாக நிறைவடையும். இதனால் பக்தர்கள் நீண்ட காத்திருப்பது தவிர்க்கப்படுகிறது. இதன்மூலம் ஒரு நாளைக்கு 80,000 பேருக்கு மேல் சுவாமி தரிசனம் செய்து வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தினமும் 2 முதல் 3 மணி நேரம் விஐபி தரிசனங்களுக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது. இது ரத்து செய்யப்பட்டால், அந்த நேரத்தில் 15 ஆயிரம் இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

* பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 59 ஆயிரத்து 186 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27 ஆயிரத்து 244 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.4.06 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் மே தினம் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை என்பதால் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி நேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியது. இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாத கெங்கம்மா கோயில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Tags : Tirupati ,Tirupati Ezhumalaiyan Temple ,Tirumala ,Ezhumalaiyan Temple ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் 15...