ஈச்சங்காடு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஜெயங்கொண்டம், மே 1: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் வாகன சேவை நடைபெற்றது. பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9ம்நாள் நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதனையொட்டி அதிகாலை லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், ஊர்வலமாக வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தாஎன்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ராஜ வீதிகளில் வலம் வந்த தேர் பின்னர் நிலையை அடைந்தது. நரசிம்மரின் அவதார தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 

Related Stories: