பெய்ஜிங்: சீன தலைநகரான பெய்ஜிங்கில் இனிமேல் ஆளில்லா விமானங்களை இயக்குவது மட்டுமல்லாமல், அவற்றை வாங்குவதும் கடினமான ஒன்றாக மாற போகிறது. ஏனென்றால் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கடுமையான விதிமுறைகளின் கீழ், சீன தலைநகரான பெய்ஜிங்கில் ட்ரோன்கள் விற்பனைக்கு சீனா தடை விதித்து உள்ளது.
தலைநகர் பெய்ஜிங்கிற்கு ஆளில்லா வான்வழி விமானங்களையோ (UAVs) அல்லது அவற்றின் முக்கிய பாகங்களையோ கொண்டு வருவதை தடைசெய்யும் இந்த புதிய விதிகளுக்கு, அதிகாரிகள் பொது பாதுகாப்பை காரணமாக சீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பெய்ஜிங் நகரில் ட்ரோன்களை விற்பனை செய்ய சீனா தடை விதித்து உள்ளதோடு, மேலும் வற்றை இயக்குவதற்கு அனுமதி பெறுவதையும் கட்டாயமாக்கியுள்ளது. இது தொடர்பான உத்தரவில் சீன தலைநகருக்குள் ட்ரோன்கள் மற்றும் அவற்றின் முக்கிய உதிரிபாகங்களை விற்பனை செய்ய, வாடகைக்கு விட அல்லது கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் ட்ரோன்களை வைத்திருப்பவர்கள் தங்கள் சாதனங்களை காவல்துறையினரிடம் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, சமீபத்திய ஆண்டுகளில் ட்ரோன்கள் தொடர்பான விதிமுறைகளை சீனா படிப்படியாகக் கடுமையாக்கி வருகிறது. சில சீன நகரங்களில், உணவு விநியோகம், விவசாயம் மற்றும் கட்டிடங்களைச் சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதை பார்ப்பது ஒரு இயல்பான காட்சியாக உள்ளது. உலகளாவிய ட்ரோன் சந்தையில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், ட்ரோன்களைப் பறக்கவிட மிகவும் கடுமையான விதிகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக சீனா மாறி வருகிறது.
தலைநகர் பெய்ஜிங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் ட்ரோன்களைக் கொண்டு செல்வதற்கு முன்பு, அவற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்கள் ட்ரோன்களை பழுது பார்க்க நகரத்திற்கு வெளியே அனுப்பினால், அவற்றை டெலிவரி மூலம் பெறுவதற்குப் பதிலாக, ரிப்பேருக்கு கொடுத்தவர்களே நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும் என புதிய விதி கூறுகிறது. இந்த விதிமுறைகளை மீறினால் 500 யுவான் (சுமார் 73 அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும் ட்ரோன் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம் ட்ரோன்கள் விவகாரத்தில் சில விதிவிலக்குகள் உள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற நோக்கங்களுக்காக, அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டால், ட்ரோன்களை பெய்ஜிங்கில் இன்னும் வாங்கவும் சேமித்து வைக்கவும் முடியும்.
இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த்துள்ளதை முன்னிட்டு, பெய்ஜிங்கில் உள்ள DJI கடைகள் ட்ரோன்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களைத் தங்கள் விற்பனையிலிருந்து அகற்றி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
