வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கிய விருந்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் குறித்து அவர் தெரிவித்த அரசியல் கருத்துக்கள் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் 250ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தற்போது அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மன்னர் உரையாற்றினார். அப்போது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் மற்றும் பிரச்னை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அவர் தவிர்த்தார். இதன்பின்னர், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் அளித்த இரவு விருந்தில் 600க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த விருந்தின் போது பேசிய அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்ததுடன், மன்னர் சார்லஸை அரசியல் விவாதத்தில் வம்புக்கு இழுக்கும் வகையில் பேசினார். அப்ேபாது அவர் கூறுகையில், ‘மேற்கு ஆசியாவில் ராணுவ ரீதியாக எதிரிகளை வீழ்த்தி விட்டோம். அந்த எதிரி நாடுகள் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் என்னை விட மன்னர் சார்லஸ் மிகுந்த உடன்பாட்டுடன் இருக்கிறார்’ எனத் தெரிவித்தார்.
இதற்கு நேரடியாக பதில் அளிக்காத மன்னர் சார்லஸ், ‘நேட்டோ அமைப்பு மற்றும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு அளிப்பது மிகவும் அவசியமானது’ என்று மட்டும் கூறிவிட்டு தனது வியூகம் சார்ந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். மன்னர் சார்லஸ் – டிரம்ப் இடையே நடந்த பேச்சுகள் இன்று சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
