காங்டாக்: சிக்கிம் மாநிலம் உருவானதின் 50வது ஆண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடைபெற்றது. பால்ஜோர் மைதானத்தில் நடந்த இந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘சிக்கிம் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறையே முதுகெலும்பாக திகழ்கிறது. மாநிலத்தின் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில் ஒன்றிய அரசு கவனம் செலுத்தி வருகின்றது.
இது சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும். மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவில் இருந்து ஒரு விரைவுச்சாலையை அமைப்பது மற்றும் காங்டாக்கில் ஒரு சுற்றுச்சாலையை உருவாக்குவது உள்ளிட்ட மாநிலத்தின் உள்கட்டமைப்புக்களை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. மாநிலத்திற்காக ரோப்வே, ஸ்கைவே திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது. அதிக சுற்றுலா பயணிகளின் வருகையை உறுதி செய்வதற்கு நாதுலாவில் ஒரு விரைவுச்சாலை அமைக்கப்படும். சிக்கிம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் அஷ்டலட்சுமிகள்.
கிழக்குநோக்கி செயல்படு, விரைந்து செயல்படு என்ற கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது” என்றார். அமைதி, ஆன்மீகம் மற்றும் நல்வாழ்வின் இருப்பிடமாக சிக்கிம் திகழ்கிறது. சுற்றுப்பயணிகள் இந்த இமயமலை மாநிலத்திற்கு பெருமளவில் வருகை தர வேண்டும். மதம் மற்றும் அரசியல் சார்புகளின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இந்த காலத்தில் இந்த இமயமலை ஒரே பாரதம், சிறந்த பாரதம் என்பதை பிரதிபலிக்கிறது” என்றார்.
