பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் போதுமான அளவு உள்ளது: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் அசோகன் தகவல்

சென்னை: பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன. எனவே எந்தவித பதற்றமும் தேவையில்லை என எண்ணெய் நிறுவனங்களின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் அசோகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (IOC, BPC மற்றும் HPC) பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன. எந்தவித பதற்றமும் தேவையில்லை, தேவையற்ற முறையில் சேமிப்பு (panic buying) செய்ய வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரிபைனரிகள், டெர்மினல்கள், டெப்போக்கள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான விநியோக சங்கிலி தடை இல்லாமல் சீராக செயல்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, இடையறாத விநியோகம் உறுதி செய்யப்படுகிறது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், தமிழ்நாடு முழுவதும் உள்நாட்டு எல்பிஜி விநியோகத்தையும் தடையின்றி மேற்கொண்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் தொடர் முயற்சிகளும், தமிழ்நாடு அரசின் நெருங்கிய கண்காணிப்பும் காரணமாக, பெரும்பாலான பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்திற்கான காத்திருப்பு காலம் 5 நாட்களுக்கு குறைவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விநியோக நேரத்தை மேலும் குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆட்டோ எல்பிஜி (Auto LPG) தொடர்பாகவும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் பங்க்குகளில் போதுமான இருப்பு உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வலையமைப்பின் மூலம் ஆட்டோ எல்பிஜி இடையறாத முறையில் கிடைப்பதை உறுதி செய்யப்படுகிறது. இதற்காக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமைதியாக இருந்து வழக்கமான பயன்பாட்டை தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும், பொதுமக்களுக்கு நம்பகமான மற்றும் இடையறாத எரிசக்தி சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: