லாலாப்பேட்டை அருகே குடிநீர் வழங்க கோரி மேலதாளியாம்பட்டியில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

*போக்குவரத்து பாதிப்பு

லாலாபேட்டை : லாலாப்பேட்டை அருகே மேல தாளியாம்பட்டியில் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கருப்பத்தூர் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது பம்பிங் மோட்டார்கள் பழுது மற்றும் போர்வெல் தண்ணீர் குறைந்தது காரணமாக சரியாக குடிநீர் விநியோகிக்க முடியவில்லை என்று கூறினார்.

வேலைக்கு செல்வது மற்றும் பள்ளி குழந்தைகளின் தேவைக்காக குடிநீர் விட வேண்டும். எனவே புதிய போர் அமைத்து போர் கால அடிப்படையில் குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் இன்று மேல தாளியம்பட்டி நான்கு ரோட்டில் சாலையின் குறுக்கே அமர்ந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர், கிருஷ்ணராயபுரம் மண்டல வட்டார வளர்ச்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது ஓரிரு நாட்களுக்குள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து தருவதாகவும், தற்போது 12 மணிக்குள் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி உங்கள் பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்து தருவதாகவும் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கடந்து சென்றனர்.

கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நாங்கள் முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கும் மிகுந்த சிரமத்திற்கும் ஆளாகி இருந்தும், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் குடிநீர் வரி கட்டாயமாக கட்ட வேண்டும் என்று கூறி வசூலிப்பவர்கள், குடிநீரை முறையாக வழங்காமல் இருக்கின்றனர்.

போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு தங்கு தடை இன்றி தங்களுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: