திருமயத்தில் திக்… திக்…பயணம் பிரதான சாலையில் தெரு விளக்கு இல்லாமல் கும்மிருட்டு

*அச்சத்துடன் கடந்து செல்லும் பெண்கள்

திருமயம் : திருமயத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்.திருச்சி – காரைக்குடி பைபாஸ் சாலையில் இருந்து திருமயம் தாமரை கண்மாய் பகுதியில் திருமயம் செல்ல விலக்கு சாலை உள்ளது.

இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. அதே சமயம் திருமயம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்களில் சம்பந்தப்பட்ட சாலையில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் திருமயம் விலக்கு சாலையில் இருந்து பைரவர் கோவில் வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தெருவிளக்குகள் ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட சாலை பகுதியில் ஒரு புறம் வயல் பகுதியும் மற்றொருபுறம் தாமரை கண்மாயும் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அந்த பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் வழிபறி நடந்த சம்பவங்களும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இரவு நேரங்களில் திருவிளக்கு இல்லாத அந்தப் பகுதி பெண்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் தாமரைக்கமாய் விளக்கு சாலையில் இருந்து திருமயம் பைரவர் கோயில் வரை புதிய மின் கம்பம் நட்டு தெரு மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: