சென்னை: தமிழ்நாட்டில் தரமில்லாத கேன் குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான புகார்கள் வந்தால் உரிய நடவடிக்க எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை போன்ற நகரங்களில் கேன் தண்ணீர் பயன்பாடு அதிகமாக உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் இதன் பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது. அப்படி விற்கப்படும் ஒரு தண்ணீர் கேன், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனையாகி வருகிறது. ஆனால், கடைகளில் வாங்கிக் குடிக்கும் கேன் தண்ணீர் மூலம் ஒவ்வாமை ஏற்படுவதாகவும், உடலில் நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் அவ்வப்போது பெறப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,500க்கும் மேற்பட்ட தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே, கேன் குடிநீரின் தரத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதலின்படி, கேன் தண்ணீரை நேரடியாக சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது. கேன்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பலமுறை பயன்படுத்திய பழைய கேன்களில் தண்ணீர் நிரப்பி விற்பனை செய்து, விதிகளைப் பின்பற்றாத கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
