அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை 2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்து கணேச பாண்டியன், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 7 பேர் மீதான வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் விசாரித்து, இந்த முறைகேட்டில் குற்றச்சதியும் நிதி இழப்போ இல்லை என தெரிவித்து லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ளன. இந்தநிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

Related Stories: