நாமகிரிப்பேட்டை, ஏப்.29: வெண்ணந்தூர் அருகே அடிதடி வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் அருகே பழந்தின்னிப்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் காளியம்மன் கோயில் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த மார்ச் 12ம் தேதி நடைபெற்றது. விழாவின்போது இரவு நேரத்தில் சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் டூவீலரில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனை மற்றொரு தரப்பினர் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. கோஷ்டி மோதலாக மாறியது. இதுகுறித்த புகாரின்பேரில், வெண்ணந்துார் போலீசார் வழக்குப்பதிந்து நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரேம்குமார்(24), அலவாய்ப்பட்டி உண்டு பெருமாள் கோயில் கரடு பகுதியைச் சேர்ந்த ரவி மகன் அன்புராஜ்(26) ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று தச்சங்காடு பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
