குமாரபாளையம் தொகுதியில் 3 மாநில போலீசார் குவிப்பு

குமாரபாளையம், ஏப்.23:குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. தொகுதியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 48 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தேர்தலில் வாக்களிக்க 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான அழியாத மை, இவிஎம் இயந்திரம் உள்ளிட்ட அனைத்தும், நேற்று அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணிக்கு வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அதன் பின்னர் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகள் முன்பாக பந்தல் அமைத்து, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் டிஎஸ்பி கௌதம் தலைமையில், அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். ராஜஸ்தான், கேரளம், கர்நாடக மாநிலங்களை சேர்ந்த போலீசார் சுமார் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தவிர பதற்றமான வாக்குச்சாவடிகளில் தனியாக ரிசர்வ் போலீசார் பணியில் உள்ளனர். பள்ளிபாளையம், வெப்படை, குமாரபாளையம், கொக்கராயன்பேட்டை, மொளசி காவல் நிலையங்களில் பணியாற்றும் சுமார் 200 போலீசார், 5 இன்ஸ்பெக்டர்கள், 25 எஸ்ஐக்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு, மாவட்ட போலீஸ் கன்ட்ரோல் ரூமூடன் இணைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும், கண்ட்ரோல் ரூம் மூலம் கண்காணிக்கப்பட்டு நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகிறது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, இயந்திரங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Related Stories: