குட்டையில் மூழ்கிய சிறுவன் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

நாமகிரிப்பேட்டை, ஏப்.25: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த ஆத்துமேடு பகுதியில் தங்கி, நெல் அறுக்கும் இயந்திரத்தின் டிரைவராக பணியாற்றி வந்தவர் பெருமாள். இவரது தந்தை பரசுராமன், தாய் பார்வதி மற்றும் மனைவி சந்தியா (22) ஆகியோர், அதே பகுதியில் உள்ள கணேசன் என்பவரின் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு பெருமாளின் இரண்டரை வயது மகன் மணிகண்டன், தாத்தா பரசுராமனுடன் வெண்ணந்தூர் அடுத்த நெ.3 கொமரபாளையம் பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றான். அங்கு பரசுராமன் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, அருகில் இருந்த சிறுவன் மணிகண்டன் திடீரென மாயமானான். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால், வெண்ணந்தூர் போலீசார் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், குட்டையில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சிறுவனின் தாய் சந்தியா அளித்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாவட்ட எஸ்பி விமலா உத்தரவின் பேரில், ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் மூன்று தனிப்படை அமைத்து, சிறுவனை தேடி வந்தனர். ராசிபுரம் எஸ்.ஐ., சதீஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று நெ.3 கொமரபாளையம் குட்டையின் அருகேயுள்ள கழிவுநீர் உறிஞ்சு குழாய் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது, அங்கு கடும் துர்நாற்றம் வீசவே, அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு சிறுவன் மணிகண்டனின் உடல், அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: