நாமக்கல், ஏப்.25: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த 5 நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்றும் (25ம் தேதி), வரும் 29ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பகல் நேர வெப்பம் 102.2 டிகிரியாகவும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தெற்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும். கோடை காலத்தில் கறவை மாடுகள், வெப்ப அழுத்தத்தினால் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்தில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. மேலும், பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திடபொருட்களின் அளவை நிலை நிறுத்த, ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு தீவனத்தில் சோடா உப்பு 100 கிராம் என்ற அளவில் கோடை காலம் முடியும் வரை கொடுக்கவேண்டும்.
ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் தினமும் 70 லிட்டருக்கு மேல் குடி தண்ணீர் கிடைக்குமாறு செய்ய வேண்டும். சிமெண்ட் தொட்டிகளில் தண்ணீர் வைப்பது, நீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க உதவும். கோடையில் பசுந்தீவனம் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிக வெயில் உள்ள நேரங்களில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலோ அல்லது மர நிழலிலோ தங்க வைக்க வேண்டும். கொட்டகையின் கூரையில் நீர் தெளிப்பான் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கால்நடைகளின் உடலுக்கு தெளிப்பான்கள், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் கருவிகள் போன்றவை மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். இது கால்நடைகளின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். கடந்த வாரம் இந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகளில் பெரும்பாலும், மேல் மூச்சுக்குழல் அயற்சி மற்றும் வெப்ப அயற்சி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே, கோழி பண்ணையாளர்கள் கோடை வெப்பம் அதிகரிப்பதால், தகுந்த கோடைக்கால பராமரிப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை முறைகளை பின்பற்றுமாறும், உயிர் எதிர் மருந்துகளை அளிக்கவேண்டும். கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி தடுப்பூசி செலுத்துதல், தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். கோடைக்காலம் துவங்கி அதிகப்படியான வெப்பம் நிலவுவதால், நீர் ஆவியாதல் அதிகமாக இருக்கும். எனவே சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்துவது சிறந்தது.
செடிகளின் வேர்ப்பகுதியில் ஈரப்பதம் குறையாமல் இருக்க அதிகாலை அல்லது மாலை வேளையில் மட்டும் நீர்பாய்ச்ச வேண்டும். செடிகளின் அடிப்பகுதியை சுற்றி காய்ந்த இலைகள், சருகு அல்லது தென்னை நார் கழிவுகளை கொண்டு மூடாக்கு இடவேண்டும். நர்சரி செடிகள் அல்லது மிக மென்மையான காய்கறி பயிர்களுக்கு 50 சதவீத நிழல்தரும் வலைகளை பயன்படுத்தி வெயிலின் தாக்கத்தை குறைக்கலாம். தற்போது கோடைகாலம் துவங்கி விட்டதால், கத்தரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், விளைச்சலை அதிகரித்து நல்ல மகசூல் பெற ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் காய்கறி நுண்ணூட்ட கலவையுடன் தகுந்த ஒட்டும் திரவம் கலந்து, நட்ட 30வது நாள் முதல், அடுத்த 15 நாட்கள் இடைவெளியில் இலைவழி தெளிப்பு செய்ய வேண்டும். இது பூக்கள் உதிர்வை தடுத்து காய்களின் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
