திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் சரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மலர் சந்தையில் கடும் வெயிலின் காரணத்தினால் பூக்களின் வரத்து குறைந்து பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

திண்டுக்கல் மாநகருக்கு சொந்தமான அண்ணா வணிக வளாகத்தில் மலர் சந்தை இயங்கி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள நரசிங்கபுரம், சின்னாளப்பட்டி, வெள்ளோடு, சாணார்பட்டி, கோபால்பட்டி மற்றும் அம்மாபட்டி உள்ளிட்ட கிராமபுரங்களில் இருந்து தினசரி 20டன் பூக்கள் விற்பனைக்கு வரும். இங்கு வரக்கூடிய பூக்கள் திருச்சி, தஞ்சை, கோவை மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆனால், தற்போது கடும் வெயிலின் காரணமாக இந்த மலர் சந்தைக்கு 20டன் பூக்கள் வருகை தரக்கூடிய இடத்தில் வெறும் 5டன் பூக்கள் மட்டுமே வந்துள்ளது. இருப்பினும் முகூர்த்த காலமின்மை காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூக்கள் வாங்காத காரணத்தால் மலர் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும், 1000 முதல் 2000 வரை விற்பனையான 1 கிலோ மல்லிகைப்பூ 200 ரூபாய்க்கும் 300 ரூபாய்க்கும், அதேபோல் சம்பங்கி பூ 120 முதல் 300 வரை விற்பனையான நிலையில் இப்போது 30 ரூபாய்க்கும், 100 முதல் 150 வரை விற்பனையான செவ்வந்தி பூக்கள் இப்போது 20 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. பூக்கள் வரத்து குறைந்ததன் காரணமாக அனைத்து பூக்களின் விலைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

Related Stories: