*தற்காப்பு நடவடிக்கைகளுக்கு டாக்டர்கள் அட்வைஸ்
திருப்பத்தூர் : கோடைகாலத்தில் உடலின் உள் வெப்பநிலை சமநிலையை இழப்பதால், ஜீரண சக்தியைத் தூண்டும் நொதிகளின் செயல்பாடு குறைந்து அஜீரண பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தற்காப்பு நடவடிக்கைகளுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கோடைகாலம் தொடங்கிய நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் அனல் காற்று வீசுவதால் புழுக்கத்தில் தவிக்கின்றனர். மதிய வேளையில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.
அத்தியாவசிய தேவைகளுக்கு செல்பவர்கள் தலையை துணியால் மூடியபடியும், குடைபிடித்தபடியும் செல்கின்றனர். மேலும் அனலில் இருந்து தப்பிக்க மக்கள் நீச்சல் குளங்களிலும், ஜூஸ், ஐஸ்கிரீம் மற்றும் நுங்கு, இளநீர் கடைகளிலும் தஞ்சமடைகின்றனர்.
இதேபோல் நேற்று மாவட்டத்தில் 101.66 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் ஏராளமானோர் நீச்சல் குளங்களில் தஞ்சமடைந்தனர். இதனால் ஜூஸ், ஐஸ் கிரீம், இளநீர் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியது.
இந்நிலையில் வெயில் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக அஜீரண பாதிப்பு பலருக்கும் ஏற்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள் அறிவுரைகள் வழங்கி உள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:
கோடை காலத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக செரிமான மண்டலம் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகிறது. பொதுவாகவே வெயில் காலங்களில் நம் உடலின் உள் வெப்பநிலை சமநிலையை இழப்பதால், ஜீரண சக்தியைத் தூண்டும் நொதிகளின் செயல்பாடு குறைகிறது. இதனால் அஜீரணம், வயிற்று உப்பசம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன.
கோடையில் உணவுப்பொருட்கள் மிக விரைவாக பாக்டீரியா தொற்றுகளுக்கு உள்ளாகும் என்பதால், சமைத்த உணவை நீண்ட நேரம் வெளியில் வைத்து உண்ணக்கூடாது. தெருவோர கடைகளில் விற்கப்படும் வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் குளிர் பானங்களில் சேர்க்கப்படும் சுகாதாரமற்ற ஐஸ் கட்டிகள் மூலம் காலரா மற்றும் டைபாய்டு போன்ற தீவிர வயிற்றுப்போக்கு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடலில் உள்ள நீர்ச்சத்து மற்றும் தாது உப்புக்கள் வெளியேறி ரத்த அழுத்தம் குறையக்கூடும். இதைத் தவிர்க்க, ஓ.ஆர்.எஸ் கரைசல், இளநீர் அல்லது உப்பு கலந்த மோர் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் தண்ணீரை மட்டும் குடிக்காமல், அதில் சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து குடிப்பது மின்பகுபொருட்களை சீராக வைக்க உதவும்.
உணவு முறையில் சில மாற்றங்களை செய்வது அஜீரணத்தை தவிர்க்க உதவும். காரமான மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்துவிட்டு, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய கஞ்சி, கூழ் அல்லது இட்லி போன்ற ஆவியில் வெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். மதிய உணவில் தயிர் அல்லது மோர் சேர்த்துக்கொள்வது குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை வலுப்படுத்தும்.
குறிப்பாக, மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுவது, தொடர்ச்சியான வாந்தி, அதிக காய்ச்சல் அல்லது கண்கள் குழி விழுந்து சிறுநீர் வெளியேற்றம் குறைவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பதே கோடை கால செரிமானப் பிரச்சனைகளுக்கான சிறந்த தடுப்பு முறையாகும். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
காய்கறிகளை கழுவுங்கள்
காய்கறிகளை சமைப்பதற்கு முன் நன்கு கழுவ வேண்டும். அதேபோல் பழங்களையும் கழுவி சாப்பிடுவது சிறந்தது. இதனால் அதன் மீதுள்ள நச்சுக்கள் அழியும். தேவைப்பட்டால், உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவலாம். அதேபோல் சாப்பிடுவதற்கு முன்பு நம் கைகளை சோப்பு போட்டு கழுவுவது முக்கியம். இதனால் கிருமி தொற்றுகளை தவிர்க்கலாம்.
காபி, டீ வேண்டாம்
காபி, டீ குடிப்பது உடலில் நீரிழப்பை அதிகரிக்கும். எனவே கோடைகாலத்தில் இவற்றை தவிர்ப்பது நல்லது. அதேபோல் அதிக சர்க்கரை கொண்ட கார்போனேட்டட் குளிர்பானங்கள் வயிற்று பிரச்னைகளை ஏற்படுத்தும். முந்தைய நாள் சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி உண்ண வேண்டாம். அதில் நச்சு ஏற்பட்டு, புட் பாய்சனாகிவிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இயற்கை தீர்வுகள் என்ன?
அஜீரணத்தை நீக்க அவ்வப்போது சீரக தண்ணீரை குடிக்கலாம். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மாதுளை ஜூஸ் குடிக்கலாம். இது குடலின் வீக்கத்தை குறைக்கும். உடனடியாக வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மேலும் அஜீரணத்தால் ஏற்படும் குமட்டலைத் தவிர்க்க ஒரு துண்டு இஞ்சி அல்லது எலுமிச்சை சாறு சிறந்த பலன் தரும்.
