கோவை, ஏப். 25:கோவை கணபதி, காமராஜபுரம், நேருஜி வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்தது. இதனால், அவர் சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மணிகண்டனின் மனைவி மகாலட்சுமி (35) தனது குழந்தைகளுடன் கணபதி பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
இதனால், மணிகண்டன் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மணிகண்டனின் உறவினர் தேவி என்பவர், மகாலட்சுமிக்கு போன் செய்து மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி, வீட்டிற்கு ஓடி வந்தார். அங்கு தனது கணவர் மணிகண்டனின் உடலை கண்டு கதறி அழுதார். இதையடுத்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
