திருப்பூர், ஏப்.20:திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி செல்வார்கள். மீன் மார்க்கெட்டில் மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் மீன் இனப்பெருக்க காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீன் மார்க்கெட்டிற்கு கடல் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் டேம் மீன்களான பாறை, நெய் மீன், கட்லா, ரோகு உள்ளிட்ட மீன்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. கடல் மீன்களின் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி கிலோவுக்கு வஞ்சிரம் ரூ.980, விளமீன் ரூ.500, கடல் பாறை ரூ.600, ஊழி ரூ.380, சங்கரா மீன் ரூ.350, இறால் ரூ.450, நெத்திலி ரூ.220 ஆகிய விலைக்கு விற்பனையானது.
மீன் மார்க்கெட் செல்லும் வழியில் இருபுறமும் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் மீன் மார்க்கெட் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள ரோட்டோர கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
