*வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்
கூடலூர் : கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வடமலை பகுதியில் வசிக்கும் விவசாயி பிஜு என்பவரது வீட்டின் அருகில் 26 நாகப்பாம்புகளை வனத்துறையினர் மீட்டனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.வடமலை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பிஜு வீட்டின் அருகில் பாம்பு சென்றதை அருகில் இருந்தவர்கள் பார்த்தனர். பின்னர், அந்த பாம்பை தேடினர்.
ஆனால், பாம்பு அருகில் உள்ள புதருக்குள் சென்று பதுங்கி கொண்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் புதருக்குள் பாம்பை தேடினர். பாம்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் அங்குள்ள புதர்களை அகற்றி பாம்பை தேடினர்.
அப்போது, புதருக்குள் இருந்த குழியை தோண்டி பார்த்தனர். அதில், 26 பாம்பு குட்டிகள் இருப்பதை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அநத பாம்பு குட்டிகளை மீட்டனர். மீட்கப்பட்ட 26 பாம்புகளும் கொடிய விஷம் உடைய நாகப்பாம்பு என தெரிய வந்தது. இதனையடுத்து மீட்கப்பட்ட பாம்புகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
இது குறித்த வனத்துறையினர் கூறுகையில், ‘‘தற்போது வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பாம்புகள் புதர்களில் இருந்து வெளியே வந்து நடமாடுவது வழக்கம். சூட்டை தணித்துக் கொள்ள குளிர்ச்சியான பகுதிகளை தேடிச் செல்லும். அவ்வாறு வெளியில் வரும் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விடும்.
எனவே, வீடுகளை சுற்றிலும் உள்ள புதர் செடிகளை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்வதோடு கதவு ஜன்னல்களை திறந்து வைக்காமல் மூடி வைப்பது நல்லது. இரவு நேரத்தில் தூங்கச் செல்லும்போது படுக்கும் இடங்களை சரியாக கண்காணிக்க வேண்டும்’’ என்றனர். இடத்தில் 26 நாகப்பாம்பு குட்டிகள் பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
