* மின்னணு இயந்திரங்கள் இன்று புறப்படும்
* முன்னேற்பாடுகள் தீவிரம்
மதுரை : மதுரை மாவட்டத்தில் தயார் நிலையில் 3079 வாக்கு சாவடிகள் உள்ளன. தொகுதிக்கு தலா ஒரு மாதிரி மற்றும் பெண்கள் நிர்வகிக்கும் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவிற்கான வாக்குசாவடிகளை தயார் செய்யும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளது.
இவற்றில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள், இன்று (ஏப்.22) நடைபெற உள்ளன. இதன்படி மேலூர் தொகுதியில் 291 வாக்குசாவடிகளும், மதுரை கிழக்கு ெதாகுதியில் 400, சோழவந்தான் தொகுதியில் 261, மதுரை வடக்கு ெதாகுதியில் 266 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், மதுரை தெற்கு தொகுதியில் 236 வாக்குசாவடிகளும், மதுரை மத்திய தொகுதியில் 253, மதுரை மேற்கில் 327, திருப்பரங்குன்றம் தொகுதியில் 352, திருமங்கலம் தொகுதியில் 351, உசிலம்பட்டி தொகுதியில் 342 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதன்படி மாவட்டத்தின் 10 தொகுதிகளுக்குமாக, 3079 வாக்குசாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தொகுதி வாரியாக தலா ஒரு மாதிரி மற்றும் முழுமையாக பெண் அலுவலர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடியும் (பிங்க் பூத்) அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, மதுரை கிழக்கு தொகுதியில் சிறுதூர் ஜெயின் வித்யாலயா பள்ளி, மதுரை வடக்கு தொகுதியில் அண்ணாநகர் அம்பிகா கல்லூரி, மதுரை தெற்கு தொகுதியில் நிர்மலா பெண்கள் மேனிலைப்பள்ளி, மதுரை மத்திய தொகுதியில் சேதுபதி மேனிலைப்பள்ளி, திருப்பரங்குன்றம் தொகுதியில் அவனியாபுரம் பிஎம்எஸ் விதியாலயா, திருமங்கலம் தொகுதியில் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி உள்ளிட்டவை பெண் அலுவலர்கள் பணியாற்றும் பிங்க் பூத்துகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒரே வாக்குப்பதிவு மையத்தில் பல வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, மதுரை மேற்கு தொகுதியில் சம்மட்டிபுரம் பிள்ளைமார் பள்ளியில் 22 வாக்குச்சாவடிகள், மதுரை கிழக்கு தொகுதியில் ஆனையூர் சிஇஓஏ பள்ளியில், 17 வாக்குசாவடிகளும், பரசுராம்பட்டி இபிஜி பள்ளியில் 12 வாக்குசாவடிகளும், திருப்பாலை இஎம்ஜி பெண்கள் யாதவா கல்லூரி மற்றும் வண்டியூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தலா 10 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் தங்களுக்கான வாக்குச்சாவடியை வாக்காளர்கள் அடையாளம் காணும் வகையில், பலவித வண்ணங்களில் வழித்தடங்கள் மற்றும் அதற்கான எண்கள் வரையப்பட்டுள்ளன. இந்த வண்ண வழித்தடங்கள் எந்ததெந்த வாக்குசாவடிக்கானவை என்ற விபரமும் குறிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையெ மாவட்டத்தில் வாக்குசாவடிகள் தயார் செய்யும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவரும், கலெக்டருமான பிரவீன்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்கள், மதுரையில் இருந்து ஏற்கனவே தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வாக்குச்சாவடி வாரியாக கொண்டு சேர்க்கும் பணிகள் இன்று நடைபெற உள்ளன. இதற்கான வாகனங்களை தயார் செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றது.
இதன்படி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் உள்ளிட்ட தொகுதிகளின் தலைமையிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த வாகனங்களில் ஏற்றப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் இன்று வாக்குச்சாவடி மையங்களை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணிகளை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் பணியாற்றும் ‘பிங்க் பூத்’
ஒரு வாக்குச்சாவடியின் தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் என, அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். இவை ‘பிங்க் பூத்’ என அழைக்கப்படுகின்றன. பெண் வாக்காளர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள், எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க இது உதவுகிறது.
பிங்க் பூத்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, குடிநீர் மற்றும் நிழற்கூடங்கள் போன்றவை உள்ளன. பெண் வாக்காளர்கள் பொது வாக்குச்சாவடியில், நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம். இது பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்துவற்காக தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்படுகிறது.
வாக்காளர்களை கவர்வதற்கு…
சட்டமன்ற தொகுதிகளில் மாதிரி வாக்குச்சாவடி என்பது தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களைக் கவரும் வகையிலும், வாக்களிப்பதை எளிமைப்படுத்தும் வகையிலும் சிறப்பாக வடிவமைக்கப்படுவதாகும்.
இந்த வாக்குச்சாவடி முழுவதும் வண்ண அலங்காரங்கள், ஓவியங்கள் மற்றும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகள் இருக்கும். மேலும் நிழற்பந்தல், குடிநீர் வசதி, நாற்காலிகள் மற்றும் கழிப்பறை வசதிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க சாய்தளங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் சிறப்பு வரிசைகள் இருக்கும். இந்த வாக்குச்சாவடி வளாகம் சுகாதாரமாக பராமரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
