×

இன்னும் 11 நாட்களே உள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது

*வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

*களத்தில் முந்தி நிற்கும் திமுக கூட்டணி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது.தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, கடந்த 30ம் தேதி தொடங்கி, 6ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து, மனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸ் முடிந்து, நேற்று முன்தினம் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியானது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 156 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, முஸ்லீம் லீக், மமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா போன்ற கட்சிகள் இணைந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 6 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடியாக மோதுகின்றன. திருவண்ணாமலை தொகுதியில் திமுகவும், பாஜகவும் களம் இறங்கியுள்ளன.

அதேபோல், போளூர் தொகுதியில் தேமுதிகவும், பாமகவும் களம் இறங்கியுள்ளன. அதேபோல், மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியும், தவெகவும் போட்டியிடுகிறது. மேலும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளும் கணிசமாக ஒவ்வொரு தொகுதியிலும் களம் இறங்கியிருக்கிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருவண்ணாமலை தொகுதியில் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக செய்யாறு தொகுதியில் 13 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த 2021 தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் 15 பேர் போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் இருமடங்காக வேட்பாளர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில், வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று முன்தினம் வெளியான நிலையில், தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே அவகாசம் உள்ளதால், சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், காலை தொடங்கி இரவு 10 மணி வரை அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதாவிஜயகாந்த், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, பாமக அன்புமணிராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சிபிஐ மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ளனர். இந்த மாவட்டத்திற்கான தவெக தலைவர் விஜய் பிரசார பயண விபரம் இன்னும் வெளியாகவில்லை.

மேலும், அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் அடுத்த சில நாட்களில் பிரசாரம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த சில நாட்களில் தேர்தல் பிரசாரம் இன்னும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை எப்போதும் இல்லாத அளவில், திமுக மெகா கூட்டணி பலத்துடன் தேர்தலை எதிர்கொள்கிறது. மேலும், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்களும், திமுகவின் தேர்தல் அறிக்கையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள ‘கிளீன் இமேஜ்’ போன்றவை இந்த தேர்தலில் மிகப்பெரிய வலிமையாக அந்த கூட்டணிக்கு அமைந்திருக்கிறது.

அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு குவிந்த கூட்டம் மிகப்பெரும் பேசுபொருளாக மாறி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

மேலும், கடந்த 2024ம் ஆண்டு எம்பி தேர்தலில் முரண்பட்ட பாஜக மற்றும் அமமுக, பாமகவுடன், இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமைந்திருப்பதும், எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பேற்ற பிறகு அதிமுக சந்தித்த எல்லா தேர்தல்களிலும் அக்கட்சி அடைந்த தொடர் தோல்விகளும் இந்த தேர்தலில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. அதனால், அந்த கூட்டணியினர் மத்தியில் சோர்வு காணப்படுகிறது.

எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் களத்தில் திமுக கட்டணி முந்தி நிற்பதை வெளிப்படையாக காண முடிகிறது என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Tags : DMK ,Tiruvannamalai ,Tiruvannamalai district ,Tamil Nadu Assembly general ,
× RELATED நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த...