×

தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்ற நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரைகுமார் நியமனம்

* விதியை மீறி சந்தீப் மிட்டலை பதவியேற்க டிஜிபி ரத்தோர் போட்ட உத்தரவு ரத்து: உள்துறை செயலாளர் அதிரடி

சென்னை: தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு வாபஸ் பெற்ற நிலையில் விதியை மீறி சந்தீப் மிட்டலை பதவியேற்க டிஜிபி ரத்தோர் போட்ட உத்தரவை உள்துறை செயலாளர் அதிரடியாக ரத்து செய்து உள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரைகுமாரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்தவர் டேவிட்சன் தேவாசீர்வாதம். இவர் கூடுதலாக ஆயுதப்படை டிஜிபி பொறுப்பையும் கவனித்து வந்தார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடக்க உள்ள நிலையில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், எஸ்பிக்கள் மற்றும் கலெக்டர்களை மாற்றிய தேர்தல் ஆணையம், லஞ்ச ஒழிப்புதுறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் மாற்றியது. சைபர் கிரைம் டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டலை, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக தேர்தல் ஆணையம் நியமித்தது.

தேர்தல் நேரத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளை மட்டுமே மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், தேர்தல் பணியில் இல்லாத லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியை தேர்தல் ஆணையம் மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, ‘‘தேர்தல் பணியில் ஈடுபடாத லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியை மாற்றியது ஏன்? இந்த உத்தரவை வாபஸ் பெறவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்திருந்தார்.

அதை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘‘லஞ்ச ஒழிப்பு மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவு தற்போது மாற்றியமைக்கப்படுகிறது. ஆயுதப்படை டிஜிபியாக மட்டும் சந்தீப் மிட்டல் நியமிக்கப்படுகிறார். அவர் உடனடியாக புதிய பணியில் சேர வேண்டும்’’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அந்த மாறுதல் உத்தரவில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக யாரையும் தேர்தல் ஆணையம் நியமிக்கவில்லை.

இதனால் அந்த பதவி காலியாக இருந்தது. தேர்தல் ஆணையம் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்டாலும், தமிழக அரசு சார்பில் உத்தரவு வெளியிடப்படும். இதன்பிறகே அதிகாரிகள் பணியிடமாற்றம் அமலுக்கு வரும். ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்துக்கான அறிவிப்பை தலைமை செயலாளரும், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்துக்கான அறிவிப்பை உள்துறை செயலாளரும் தான் உத்தரவிடுவார்கள். அதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனி இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது. இந்த துறை சட்டம் ஒழுங்கு டிஜிபிக்குள் வராது.

இந்த துறை நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த சூழலில், தேர்தல் ஆணையத்தால் ஆயுதப்படை டிஜிபியாக மட்டும் நியமிக்கப்பட்ட சந்தீப் மிட்டலை, உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாகவும் பதவியேற்க சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியை நியமிக்க ரத்தோருக்கு எந்த அதிகாரமும் இல்லை. உள்துறை செயலாளர்தான் நியமிக்க முடியும்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலை பதவியேற்க சொல்லி ரத்தோர் உத்தரவிட்ட தகவல் புதிதாக உள்துறை செயலாளராக பதவியேற்ற மணிவாசனுக்கு சென்றது. தனது வரம்பு எல்லையை மீறி டிஜிபி ரத்தோர் செயல்பட்டு, சந்தீப் மிட்டலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பதவியேற்க வற்புறுத்தியதை உடனடியாக அரசின் கவனத்துக்கு உள்துறை செயலாளர் மணிவாசன் கொண்டு சென்றார்.

இதையடுத்து, டிஜிபி ரத்தோர் போட்ட உத்தரவை ரத்து செய்து, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராகவும், ஐஜியாகவும் உள்ள துரைகுமாரை, லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். டேவிட்சன் தேவாசீர்வாதம் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக இருந்தார். ஆயுதப்படை காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதனால், ஆயுதப்படை டிஜிபி பொறுப்பை கவனித்து வந்ததால்தான் டேவிட்சனை தேர்தல் ஆணையம் மாற்றியது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மாற்றத்தை மட்டும் தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றதால் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக டேவிட்சன் நியமிக்கபடலாம் என்று கூறப்பட்டது. ஆனால், பொறுப்பு இயக்குநரை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Thuraikumar ,Bribery Department ,Election Commission ,TGB Rathore ,Sandeep Mittal ,Chennai ,
× RELATED காரைக்கால் மீன் பிடித்துறைமுகத்தில்...