கென்-பெட்வா நதிநீர் இணைப்புக்கு எதிர்ப்பு; பழங்குடியின பெண்கள் ‘சிதை போராட்டம்’: பாஜக ஆளும் ம.பி, உ.பி, சட்டீஸ்கரில் பரபரப்பு

ராய்ப்பூர்: கென்-பெட்வா நதிநீர் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது சட்டீஸ்கரில் பெண்கள் ‘சிதை போராட்டம்’ நடத்தியதால், பாஜக ஆளும் ம.பி, உ.பி மாநிலங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களின் வறண்ட பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசன வசதி வழங்கும் நோக்கில், கென் மற்றும் பெட்வா நதிகளை இணைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தவுதான் அணை மற்றும் 200 கிலோமீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசனம் பெறும் என்றும், 62 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த திட்டத்தால் தங்கள் நிலங்கள் மற்றும் வன உரிமைகள் பறிபோகும் என்றும், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதி பழங்குடியின மக்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டீஸ்கர் எல்லையையொட்டிய மத்திய பிரதேச மாநிலம் சட்டீஸ்கர் மாவட்டத்தின் அணை பகுதியில் நூற்றுக்கணக்கான பழங்குடியின விவசாயிகள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பழங்குடியின பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து, அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்த பாடைகளின் மீது படுத்துக்கொண்டு ‘சிதை போராட்டம்’ நடத்தினார்கள். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. மாவட்ட நிர்வாகம் தரப்பில் அந்த பகுதிகளில் 163வது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இன்று (10ம் தேதி) 2வது நாளாக கென் நதியின் நடுப்பகுதியில் நின்றபடி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: