வாக்களிக்க வந்த பெண் 5 மணி நேரம் காக்க வைப்பு: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கூர்க்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அக்‌ஷயா. கடந்த 3 நாளுக்கு முன்பு சமையல் செய்து கொண்டிருந்தபோது மிக்சியில் இடது கையின் ஆள்காட்டி விரல் சிக்கி காயம் ஏற்பட்டது. அவரது விரலில் 15 தையல்கள் போடப்பட்டன. அதனுடன் நேற்று மதியம் 1 மணிக்கு ஓட்டு போடுவதற்காக வாக்குச் சாவடிக்கு வந்தார். தன்னுடன் 3வது மகளையும் அழைத்து சென்றிருந்தார். ஆனால் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்க வேண்டும் என்பதால் தையலை பிரித்தால் மட்டுமே ஓட்டு போட அனுமதிக்க முடியும் என்று வாக்குப்பதிவு மைய அதிகாரி கூறினார். தையலை உடனே பிரிக்க முடியாது என்று அக்‌ஷயாவும் கூறினார். மருத்துவ சான்றிதழை காண்பித்த பிறகும் ஓட்டுப் போட அதிகாரி அனுமதி மறுத்தார்.

ஓட்டு போடும் வரை அங்கிருந்து நகரப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்த அக்‌ஷயா வாக்குச்சாவடிக்கு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டார். இதுகுறித்து அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுனில்குமார் உள்பட ஏராளமானோர் விரைந்தனர். வாக்குப்பதிவு மைய அதிகாரியிடம் அக்‌ஷயாவை ஓட்டு போட அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் அவர் ஏற்கவில்லை. ஓட்டு போடும்போது இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்க வேண்டும் என்ற சட்டத்தை தன்னால் மீற முடியாது என்று அவர் கூறினார். இதுகுறித்து அறிந்த கலெக்டர் தலையிட்ட பிறகும் வாக்குப்பதிவு மைய அதிகாரி மசியவில்லை. இது தொடர்பாக கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு.கேல்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் தலையிட்ட பின்னரே ஓட்டு போடுவதற்கான நேரம் முடியும் தருவாயில் 6 மணியளவில் பிரமாண வாக்குமூலம் எழுதி வாங்கி அக்‌ஷயாவை ஓட்டு போட வாக்குப்பதிவு மைய அதிகாரி அனுமதித்தார். அவரது ஆள்காட்டி விரலின் மேல் பகுதியில் மை வைக்கப்பட்டது. ஓட்டு போடுவதற்காக சுமார் 5 மணிநேரம் அக்‌ஷயா வாக்குப்பதிவு மையத்தில் தன்னுடைய குழந்தையுடன் காத்திருந்தார். இந்த சம்பவம் குறித்து கேரள குழந்தைகள் உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திருச்சூர் கலெக்டருக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

Related Stories: