வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு வீடுவீடாக டோக்கன் விநியோகம்: ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தாராளம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு துவங்கி உள்ள நிலையில் பாகூர் சட்டமன்ற தொகுதியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தியாகராஜன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பரிசு டோக்கன் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பு அதிகாலையில் வீடு, வீடாக சென்று அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு ரொக்கப் பரிசு, மளிகை பொருட்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாக்குப்பதிவுக்கு பின்பு வழங்குவதாக உறுதிஅளித்து ரூ.1,500 மதிப்பிலான பரிசு கூப்பனை விநியோகித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திமுக வேட்பாளர் செந்தில்குமாரின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, விதிமீறலை தட்டிக் கேட்டதோடு டோக்கன் விநியோகத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த என்ஆர் காங்கிரஸ் தரப்பினர், திமுகவினரிடம் கடும் வாக்குவாதம் செய்ததோடு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதையடுத்து பாகூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட, உடனே என்.ஆர். காங்கிரஸ் தரப்பினர் டோக்கன்களை சாலையில் வீசி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதை பறிமுதல் செய்த போலீசார், டோக்கன்களை கைப்பற்றி, அதை விநியோகித்தவர்கள் யார்? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: