விருத்தாசலம், ஏப். 8: பெண்ணாடம் அருகே உள்ள இறையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரபிக் அகமது(58). சம்பவத்தன்று காலை இவர் தனது வீட்டிலிருந்து கிளம்பி விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொன்னேரி மாதா கோவில் அருகே கலையரசன் என்பவரின் வீட்டில், கலையரசனின் மனைவி திலகவதியிடம் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கொளஞ்சி சாப்பாடு கேட்டுக் கொண்டிருந்துள்ளார். மேலும் அவரை அசிங்கமாக திட்டிக்கொண்டு இருந்தபோது, இதனைப் பார்த்த ரபிக் அகமது, ஏன் இப்படி அசிங்கமாக பெண்ணை திட்டுகிறாய் என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி உனக்கு என்னடா, நீ யாருடா என்னை கேட்கிறாய் என்று அசிங்கமாக திட்டி, தாக்கியதுடன் அருகில் கீழே கிடந்த மது பாட்டிலை எடுத்து உடைத்து ரபீக் அகமதுவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். இது குறித்து ரபீக் அகமது, பெண்ணாடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
