டெபாசிட் தொகையை சில்லரையாக கொண்டு வந்த பிஎஸ்பி வேட்பாளர்

விக்கிரவாண்டி, ஏப். 7: தமிழகத்தில் தேர்தல் வரும் 23ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30ம் தேதி துவங்கி நடந்து நேற்றுடன் முடிவடைந்தது.
நேற்று கடைசி நாள் என்பதால் விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுகவில் அன்னியூர் சிவா, பாமகவில் சிவக்குமார், பாமக ராமதாஸ் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் ஸ்டாலின், தமிழக வாழ்வுரிமை கட்சி சேட்டு, சுயேட்சை மாற்று வேட்பாளர் என 23 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதுவரை விக்கிரவாண்டி தொகுதிக்கு மொத்தமாக 34 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் இன்று வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்படுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்பரசன் (34) நேற்று தனது மனைவி அனிதா, கைக்குழந்தை மற்றும் ஆதரவாளருடன் தேர்தல் அலுவலர் விஜயாவிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் தனது டெபாசிட் தொகையான ரூ. 5 ஆயிரத்தை, ஐந்து ரூபாய் நாணயங்களாக 200, இரண்டு ரூபாய் நாணயங்களாக 300, ஒரு ரூபாய் நாணயங்களாக 300 என சில்லரையாகவும், மீதி தொகை பணமாகவும் டெபாசிட் தொகையாக செலுத்தினார். சில்லரை காசுகளை மூட்டையாக கொண்டு வந்து டெபாசிட் செய்தது அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: