ராணிப்பேட்டை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.காந்தியை ஆதரித்து நேற்று மாலை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது:
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கும் பழனிசாமிக்கும் ஒத்துவரவில்லை. அதனால் பிரிந்துவிட்டார்கள். அப்போது இபிஎஸ் சொன்னாரு ‘இஸ்லாமிய சகோதரர்களே நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். இனிமேல நான் பிஜேபியுடன் எந்த ஒட்டும் உறவும் இருக்காது, கூட்டணி கிடையாது’ என்றார். மறுபடியும் இப்போ அவங்களோட போய் கைகோர்த்துக்கொண்டு மேடையிலே நிற்கிறார். அவருடைய உண்மையான விஸ்வரூபம் இதுதான். பிஜேபி எதையாவது புதுசா, இல்லாத ஒன்றை இருக்கிற மாதிரி இட்டுக்கட்டி பேசுவார்கள். அவங்களுடைய ஸ்டூடன்ட் ஆகிவிட்டார் பழனிசாமி. அவர்கள் சொல்லுவதை இவரும் திரும்பச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
இங்கே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று. எந்த பெண்ணும் பாதிக்க கூடாது என்பதுதான் திமுகவின் எண்ணம். நம்மை பார்த்து குறை சொல்லக்கூடிய அருகதை யாருக்கும் இல்லை. பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்ற போது குற்றவாளிகளை காப்பாற்ற துடித்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தமிழ்நாட்டிலே ஒரு குற்றம் நடந்தால் அந்த குற்றவாளிகளை தண்டிக்கக்கூடிய ஆட்சி தான் திமுக, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணாமலைக்கு தான் பயம்
திமுக தேர்தல் பயத்தில் இருப்பதாக அண்ணாமலை கருத்து தெரிவித்தது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு , ‘எதற்காக நாங்கள் பயப்பட வேண்டும்? தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதால் அண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் பயம் என்பது அவர்களுக்குத்தான், திமுகவிற்கு இல்லை’ என்று கனிமொழி பதில் அளித்தார்.
