சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், திமுகவும், பாஜவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று பேசியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது, கடுகளவு உண்மை கூட இல்லாதது.
இந்தியாவிலேயே தேசிய அளவில் பாஜவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் எதிர்த்து நாள்தோறும் கடும் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருபவர் ராகுல்காந்தி. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளாக பாஜவை எதிர்த்து செய்து வருகிற விமர்சனத்தைப் போல எந்த மாநில முதல்வரும் செய்திருக்க முடியாது.
இத்தகைய கொள்கைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற நிலையில், கொஞ்சம் கூட பொறுப்பற்ற முறையில் பாஜவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸையும் திமுகவையும் இட்டுக்கட்டி பேசுவதன் மூலம் மம்தா பானர்ஜியின் அரசியல் அறியாமை தான் வெளிப்படுகிறது. உடனடியாக இந்த குற்றச்சாட்டை திரும்பப் பெற கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
