×

ராணிப்பேட்டை தொகுதியில் மகன் திடீர் வாபஸ் அமைச்சர் போட்டி

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் ஆர்.காந்தியின் மகனும், திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் வினோத் காந்தி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று வினோத் காந்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘2026 சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த திமுக தலைவருக்கும், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், என் தந்தையார் மீண்டும் தொகுதியில் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில்கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன். என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: தொகுதியில் எந்த பிரச்னையும் இல்லை. எனது மகனுடன் தான் நான் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வந்தேன். சமூக ஊடகங்களில் தேவையில்லாத பதிவுகள் செய்கின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்ததையடுத்து நான் வேட்புமனு தாக்கல் செய்தேன். ராணிப்பேட்டை தொகுதி மட்டும் இல்லை, தமிழக முதல்வர் செய்த திட்டங்களால் தமிழ்நாடு முழுவதும் மகத்தான வெற்றி அடைவோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிற மகத்தான திட்டங்களுக்கு 234 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றிபெறும். இவ்வாறு தெரிவித்தார்.

* டிவிகே என கூச்சலிட்ட நபரை தாக்கிய நாதக தொண்டர்கள்
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சந்திப்பில் கதிர்காமம் தொகுதி வேட்பாளர் சுபஸ்ரீயை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தபோது, டூவீலரில் வந்த ஒருவர் டி.வி.கே., டி.வி.கே என்று கூச்சலிட்டார். ‘ஏன் இங்கு வந்து டீ விக்கிற, அப்படி போய் டீ வித்துட்டு போடா’ என்று சீமான் கூற, பதிலுக்கு அவர் திட்டினார். ஆத்திரமடைந்த சீமான் ‘டே இங்க வாடா.. இங்க வந்து டீ வித்துட்டு போடா’ என கோபமாக குரல் கொடுத்தார். இதைக்கேட்ட நாதக தொண்டர்கள் அந்த நபரை சுற்றிவளைத்து தாக்கினர். இதை போலீசார் தடுத்தனர். அப்போது சீமான், ‘நம் கட்சி தொண்டர்கள் அறிவார்ந்தவர்கள், தவெக கட்சியினர் தற்குறிகள், நீங்கள் போராளியின் பிள்ளைகள், அவர்கள் கோமாளியின் பிள்ளைகள்’ என்று தொண்டர்களை சீமான் சமாதானப்படுத்தினார்.

Tags : Ranipettai ,Ranipet ,Minister ,R. Gandhi ,Dimuka State Environment Team ,Deputy Secretary ,Vinod Gandhi ,
× RELATED மேற்குவங்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை...