×

இரும்பு பெட்டிக்குள் எடப்பாடிய அமித்ஷா சிறை வச்சு இருக்காரு… பந்தாடிய ஜவாஹிருல்லா

நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். இவர், நேற்று நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் திமுக அரசின் நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளது. எனவே திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாக பேசி வருகிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போது தினசரி அவர் இட்லி சாப்பிட்டார், பொங்கல் சாப்பிட்டார் என கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாரும் சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனையில் அவரை இரும்பு கம்பிகளுக்கு இடையே வைத்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி. ஆனால் மறைந்த முதல்வர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கூட்டணி கட்சித்தலைவர்கள் நேரில் சென்று பார்க்க முடிந்தது.

அவரது உடல்நிலை குறித்து தினசரி அறிக்கைகள் வெளி வந்தது. திமுக திறந்த புத்தகமாக உள்ளது. அங்கு ஒளிவு மறைவு ஏதும் இல்லை. ஆனால் அதிமுக இரும்பு பெட்டியில் சிறை வைக்கப்பட்டுள்ளது. அந்த இரும்பு பெட்டியின் சாவி அமித்ஷாவிடம் உள்ளது. இத்தகைய சூழலில் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சிப்பது வேடிக்கையானது. சிறுபான்மையினருக்கு எதிரான வக்பு வாரிய திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றில் அதிமுக, பாஜவுக்கு ஆதரவாகவே வாக்களித்தது. ஆனால் திமுக சிறுபான்மையினரின் பாதுகாவலனாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* விஜய் ரசிகர்களுக்கு அரசியல் பக்குவமில்லை: காளியம்மாள் ஒரே போடு
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணாவை ஆதரித்து, அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் காளியம்மாள் திருவாலங்காடு, பேரம்பாக்கம், மணவாள நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்து, தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் காளியம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது: ஈழத் தமிழர்களுக்கான குடியுரிமை வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்திருந்தேன். அதனை பரிசீலிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதால் அதிமுகவில் இணைந்தேன். தவெக தலைவர் விஜய் ரசிகர்கள் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை. தலைவர் விஜய் அதனை சரிசெய்ய வேண்டும். பாஜ நிர்ப்பந்தத்தால் தான் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ளதாக விஜய் கூறி வருகிறார். ஆனால், விஜய்யுடன் ஒரு கட்சி கூட கூட்டணிக்கு செல்லவில்லை. தவெக தலைவர் விஜய், அவரின் கட்சியின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களில் பல்வேறு குளறுபடி ஆகியுள்ளது. இதனை தவிர்க்க முன்பே அனுபவம் உள்ள வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* தேர்தலில் போட்டியிட சீட் தராததால் வருத்தமா? அண்ணாமலை விரக்தி
கோவை தனியார் ஓட்டலில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ சார்பில் தினமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்த இருக்கிறோம். நிச்சயமாக என்டிஏ கூட்டணி 210 தொகுதி தாண்டி ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. எப்சிஆர்ஏ மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது இல்லை. நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கட்சி தேசிய தலைவருக்கு கடிதம் எழுதியதாக சமூக வலைதளத்தில் வலம் வரும் கடிதம் முழுவதும் பொய்யானது. பிரதமர் மோடி வரும் 15ம் தேதி கன்னியாகுமரி பிரசாரம் செய்ய வருகிறார். இதையடுத்து, சில நாட்கள் முடித்து கோவைக்கு பிரசாரம் செய்ய வருகிறார். தமிழ்நாட்டில் என் அரசியல் பயணம் தொடரும். நான் எந்த தொகுதியிலும் போட்டியிட கட்சியிடம் வாய்ப்பு கேட்கவில்லை. இதனை நீங்கள் என் கட்சி தலைவரிடமே கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

கடைசி இரண்டு வாரத்தில் களம் மாறும். விஜய் அரசியலை வரவேற்கிறேன். அவர் களத்தில் இருக்கட்டும். ஆனால், கடைசி 10 நாளில் இரு முனை போட்டியாக மாறும். ஆளும் கட்சியான திமுக கூட்டணி மற்றும் அதிமுகவின் என்டிஏ கூட்டணிக்கு இடையே தான் போட்டி இருக்கும். கேரளம், புதுச்சேரியில் பாஜ கட்சி பல இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். ஒன்றிய அமைச்சர் பதவி வாங்க போவதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, ‘‘இந்த முறை நான் பிரசாரம் செய்கிறேன் என கட்சியிடம் தெரிவித்தேன். அதனை கட்சி ஏற்றுக்கொண்டது. அனைத்து பகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளேன்’’ என்றார். தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது உங்களுக்கு வருத்தம் இல்லையா என்ற கேள்விக்கு, ‘‘எனக்கு வருத்தம் இல்லை. 2024 மார்ச் மாதமே கட்சியின் தலைவர்கள் சார்பில் தேர்தல் தொடர்பாக முடிவு எடுத்துள்ளது. கட்சி எடுத்துள்ள முடிவை சக்சஸ் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன். ஆதரவாளர்கள் யாருக்கும் அதிருப்தியில் இல்லை’’ என்றார்.

Tags : Amit Shah ,Jawahirullah ,Humanity People's Party ,Nagapattinam ,DMK ,Nagapattinam RTO ,
× RELATED மேற்குவங்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை...