×

காரைக்குடியில் வீடும் கிடையாது ஓட்டும் கிடையாது: செட்டிநாடு சாப்பாடு போட்டு சீமானுக்கு விபூதி பூசி அனுப்புங்க… கார்த்தி சிதம்பரம் செம கலாய்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பேசியதாவது: இங்கு சீமான் வேட்பாளராக நிற்கிறார். அவருக்கும், காரைக்குடிக்கும் சம்பந்தம் கிடையாது. அவருக்கு காரைக்குடியில் சொந்த வீடு கிடையாது. வாக்கும் கிடையாது. தேர்தலின் போது வருவார். பின்னர் காணாமல் போய் விடுவார். திரும்ப வரவே மாட்டார். கடந்த தேர்தலின் போது சீமான் திருவெற்றியூரில் நின்றார். திருவெற்றியூரில் நின்றவர் தோல்வியடைந்தார், பின்னர் திருவெற்றியூர் போகவே இல்லை. தேர்தல் சீசன் முடிந்த பிறகு காரைக்குடி பக்கம் வரவேமாட்டார். பாராளுமன்ற தேர்தலில் நான் நின்ற போது என்னை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி நின்றார். தேர்தல் முடிந்தபிறகு தஞ்சாவூருக்கு சென்றவர் பின்னர் திரும்ப வரவே இல்லை.

சீமான் கட்சி எப்போதும் அப்படித்தான். சீமான் வந்தால் நன்றாக செட்டிநாட்டு சாப்பாடு போட்டு, பிள்ளையார்பட்டிக்கு அனுப்பி விபூதியை போட்டு திருப்பி அனுப்ப வேண்டும். நமது ஊருக்கும் அவருக்கு சம்பந்தம் கிடையாது. அவரை பார்க்க வேண்டும் என்றால் கூட ஓட்டலில் போய்தான் பார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் கிடையாது. அடுத்ததாக புதிதாக நடிகர் ஒருவர் கட்சி துவங்கியுள்ளார். அவர் கட்சியில் ஒரு வேட்பாளர் நிற்கிறார். டாக்டர் என கூறினர். அந்த டாக்டருக்கு முழுநேரமாக ரீல்ஸ் போடுவது தான் வேலை. அவர் பெயர் டாக்டர் ரீல்ஸ் என நான் வைத்துள்ளேன். எப்போது பார்த்தாலும் ரீல்ஸ் தான் போடுவார். ரீல்ஸ் போட்டா லைக் போட வேண்டும். ஓட்டுபோட முடியுமா, ஓட்டு போட முடியாது.

இன்னொருவர் குக்கர் சின்னத்தில் மீண்டும் நிற்கிறார். இரண்டு முறை நின்று தோல்வியடைந்துள்ளார். மூன்றாவது முறையாக நிற்கிறார். நான் அடித்து கூறுகிறேன். இந்த தேர்தலுக்கு பிறகு குக்கர் கட்சி இருக்காது. பாஜவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும், அந்த கட்சியை கடித்து, குதறி சாப்பிட்டு, ஸ்வாகா செய்து விடுவார்கள். அடுத்த தேர்தலில் குக்கரே இருக்காது. அது தாமரையாக மாறிவிடும். டிடிவி.தினகரன் எனது நண்பர் தான், எனக்கு மிகவும் வேண்டியவர். அவரிடம் கூறிவிட்டேன் கடைசி முறையாக உங்கள் சின்னத்தில் நிற்கிறீர்கள், அடுத்தமுறை உங்கள் கட்சியும் இருக்காது, உங்கள் சின்னமும் இருக்காது என கூறினேன்.

சினிமாவை கண்டு கவர்ச்சியடைய கூடாது, அவர்கள் வந்தால் நாட்டை ஆளமுடியாது, அதிகாரிகளிடம் பேசமுடியாது, வீட்டை விட்டே வெளியே வராதவர்கள் கோட்டைக்கா போகப் போகிறார்கள். கட்சிகாரர்களை பார்க்காதவர்கள், அதிகாரிகளையா பார்க்க போகிறார்கள். பைல் படிக்க பொறுமை இருக்காது, பைலில் உள்ள கருத்தை உள்வாங்கி கொள்ள திறமை இருக்காது. எனவே அவர்களை நிராகரிக்க வேண்டும். விபரீத ரீதியாக சரித்திர பிழையாக முதல்வராக ஆனவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராக ஆகவில்லை. எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் கொண்டு போய் வைத்தார். பின்னர் கீழே இருந்து மேலே வந்து முதல்வராக ஆனார். தேர்தலில் நின்று வெற்றி பெற்று வரவில்லை. தேர்தலில் நின்று மக்களை சந்தித்து வெற்றி பெற்ற ஒரே முதல்வர் வேட்பாளராக களத்தில் உள்ளவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். இவ்வாறு கூறினார்.

* கேப்டன் போல் நானும்… பிரேமலதா சபதம்
விருத்தாசலம் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கேப்டன் முதல் முறையாக எப்படி விருத்தாசலத்தில் கடந்த 2006ல் வெற்றி பெற்றாரோ, அதேபோல இந்த முறை விருத்தாசலம் தொகுதியில் இந்த கூட்டணியில் நாங்கள் வெற்றி பெறுவோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் 2வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலினிடம் விருத்தாசலத்தை முதலில் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக வலியுறுத்துவேன்.

2006ல் இருந்து விருத்தாசலம் எங்களுடைய ரத்தத்தில் கலந்த ஒரு தொகுதி. இங்கு இருக்கிற மக்கள் வேறு, நான் வேறு கிடையாது. நானும் விஜய்காந்துடன் போகாத ஊர் கிடையாது. செல்லாத இடம் கிடையாது. பார்க்காத மக்கள் கிடையாது. விருத்தாசலத்தில் எல்லா இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். நகரம், பேரூர், கிராமம் எல்லா இடத்திற்கும் சென்று வந்துள்ளேன். 20 ஆண்டு கழித்து மீண்டும் வரலாறு திரும்புகிறது. 2006க்கு பிறகு மீண்டும் வெற்றி பெற்று விருத்தாசலத்தை மிக சிறந்த தொகுதியாக மாற்றுவேன். 18,19,20 மற்றும் 21 ஆகிய நாட்கள் விருத்தாசலத்தில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Karaikudi ,Chettinad ,Seeman… ,Karthi Chidambaram ,Secular Progressive Alliance ,Karaikudi, Sivaganga district ,Seeman ,
× RELATED மேற்குவங்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை...