நெல்லை, ஏப். 6: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உவரி புனித அந்தோணியார் ஆலயத்தில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30ம் தேதி துவங்கியது. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் எம்எல்ஏ 3ம் முறையாக போட்டியிடுகிறார்.
இவரை அறிமுகப்படுத்தி நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உவரி புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சென்ற நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அங்கு மனமுருக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
அப்போது மதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ரைமண்ட், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜேம்ஸ்போர்டு, வாகை துரை, பாண்டியராஜன், காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் மைக்கேல் செஞ்சூரியன், நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், களக்காடு கக்கன், நாங்குநேரி நகர தலைவர் சுடலைக்கண்ணு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
