சண்டிகர்: அரியானா மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 5 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்ய காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது. அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 2 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில்,பாஜ வேட்பாளர் சஞ்சய் பாட்டியா எளிதில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் கரம் வீர் சிங் பவுத் கடும் இழுபறிக்கிடையே வெற்றி பெற்றார். பாஜ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சதீஷ் நந்தால் தோல்வி அடைந்தார்.
இந்த தேர்தலில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததாக புகார் வந்தது. இதையடுத்து 5 எம்எல்ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. இது பற்றி தரம்பால் மாலிக் தலைமையிலான காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இந்த நிலையில்,நேற்று வட்டாரங்கள் கூறுகையில், நோட்டீசுக்கு எம்எல்ஏக்கள் அளித்த பதில்களை ஆய்வு செய்த பின்னர்,
அவர்களை சஸ்பெண்ட் செய்ய ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது என்றன. தரம்பால் மாலிக் கூறுகையில்,இது பற்றி விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மாநில தலைவர் ராவ் நரேந்திரசிங், கட்சியின் பொது செயலாளர் பி.கே.ஹரிபிரசாத் மற்றும் மூத்த தலைவர் வேணுகோபாலிடம் அளித்துள்ளோம்.எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கையை எடுப்பது பற்றி கட்சி முடிவு செய்யும் என்றார்.
