×

புதுச்சேரியை தலைவர்கள் முற்றுகை: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமித்ஷா, ராகுல்காந்தி இன்று வருகை

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் புதுவையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் புதுவையை முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். கடந்த 4ம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ மூலம் தேஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் அவரது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி 3 இடங்களில் பிரசாரம் செய்தார்.

தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று புதுச்சேரி அண்ணா திடலில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து, பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் காரைக்கால் திருநள்ளாறில் ரோடு ேஷா மற்றும் தவளக்குப்பத்தில் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டார். இதேபோல் விசிக தலைவர் திருமாவளவன் புதுவை நகரப்பகுதியில் பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், உச்ச கட்ட பிரசாரமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களைவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று பிரசாரத்துக்கு வருகின்றனர். ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மண்ணாடிப்பட்டு தொகுதியான திருக்கனூரில் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று மாலை 3.15 மணிக்கு கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானத்தில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

பின்னர், மாலை 3.20 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு வருகிறார். இதேபோல், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை கூடம் மைதானத்தில் பிரசாரம் செய்கிறார். மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி இன்று மதியம் 1 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இதற்காக ராகுல்காந்தி காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்த தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து புறப்பட்டு 12 பேர் பயணிக்க கூடிய மினி விமானத்தில் புதுச்சேரி வருகிறார். இதனால், பல்வேறு பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,Chief Minister ,M.K. Stalin ,Amit Shah ,Rahul Gandhi ,Modi ,
× RELATED ஒடிசா மாநில உயர் கல்வி நிறுவனங்களில்...