திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் வரும் 9ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 16ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 23ம் தேதி நிறைவடைந்தது. மறுநாள் (24ம் தேதி) வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறும் தேதி முடிவடைந்த பின்னர் 863 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியான நான்காம் வாரத்திலேயே தேர்தல் நடைபெறுவதால் அனைத்துக் கட்சிகளும் உடனடியாக பிரசாரத்தில் குதித்தன. சில கட்சிகளில் வேட்பாளர்களை அறிவிக்க தாமதமானதால் அந்த தொகுதிகளில் முதலில் பிரசாரம் மிகவும் மந்தமாக இருந்தது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் கடந்த இரு வாரங்களாக கேரளாவில் தேர்தல் களம் சூடு பிடித்தது. பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமித்ஷா உள்பட ஒன்றிய அமைச்சர்கள், பிரியங்கா காந்தி எம்பி உள்பட தேசிய தலைவர்கள் கேரளாவை முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.
கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. 9ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய போலீஸ் படை வரவழைக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு. கேல்கர் தெரிவித்துள்ளார். பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ், இடதுசாரி மற்றும் பாஜ கூட்டணி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
