கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று முன்தினம் ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தில் கே.பி.முனுசாமி திறந்த ஜீப்பில் நின்று வாக்கு சேகரித்தார். வேப்பனஹள்ளி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிக அளவில் இருப்பதால், அப்பகுதி மக்களிடம் தெலுங்கு மொழியில் பேசி வாக்கு சேகரித்தார்.
அப்போது தெலுங்கு மொழியில் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா?. சந்தோஷமாக இருக்கிறது. பெரியவர்கள் நீங்கள் தெலுங்கில் பேசுங்கள் என சொல்லுகிறார்கள். நானும் தெலுங்கில் பேசுகிறேன். இன்னும் 6 மாதங்களில் முழுமையாக கற்றுக் கொள்கிறேன். அதன் பிறகு முழுமையாக உங்களுடன் தெலுங்கில் பேசுகிறேன் என பேசினார். அவர் தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி பேசினார். இதனை அங்கிருந்தவர்கள் கைதட்டி வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
