ஒரே நேரத்தில் இரண்டு தீவிர இதய பிரச்சனைகளுக்கு வெற்றிகரமாக நவீன சிகிச்சை: காவேரி மருத்துவமனை புதிய சாதனை

 

சென்னை: ஒரே நேரத்தில் இரண்டு தீவிர இதய பிரச்சனைகளுக்கு வெற்றிகரமான அப்லேஷன் (Ablation) சிகிச்சை அளித்து காவேரி மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுடன் உயிருக்கு ஆபத்தான இரண்டு விதமான இதயத் துடிப்புப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட 71 வயது முதியவருக்கு, கதீட்டர் அடிப்படையிலான நவீன சிகிச்சை முறையின் மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 71 வயது முதியவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறு மற்றும் இதய செயலிழப்பு போன்ற பல உடல்நலப் பாதிப்புகள் இருந்தன. அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சையும் (CABG), இதயத் துடிப்பைச் சீராக்கும் கருவியும் (ICD) பொருத்தப்பட்டிருந்தது. இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த நிலையில், இதய மேலறையிலும், இதய கீழறையிலும் உயிருக்கு ஆபத்தான இரண்டு விதமான சீரற்ற இதயத் துடிப்புப் பிரச்சனைகள் அவருக்கு ஏற்பட்டன: இதற்காக அந்த நோயாளிக்கு ஏற்கனவே ‘ஐ.சி.டி’ (ICD) கருவி மூலம் உயிர்காக்கும் மின் அதிர்ச்சி அளிக்கப்பட்டிருந்தது.

ஒரே நேரத்தில் இரண்டு பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலானது. வழக்கமாக இத்தகைய கூட்டு சிகிச்சைகள் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும். மேலும், இதற்கு முழுமையான பொது மயக்க மருந்து அளிக்கப்பட்டு, சுவாசக் குழாய் வழியாகச் செயற்கை சுவாசம் வழங்கப்பட வேண்டும். இது போன்ற சிக்கலான முறை, மற்ற உடல்நலப் பாதிப்புகள் கொண்ட முதியவர்களுக்கு அதிக சிக்கலானதாக இருக்கக்கூடும். இதய மின்உடலியங்கியல் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய குழுவினர் விரிவான ஆலோசனைக்குப் பிறகு, நோயாளிக்கு முழு மயக்கம் தராமல், விழிப்புடன் இருக்கும் போதே ஒரே அமர்வில் இந்த இரண்டு சிகிச்சைகளையும் செய்ய முடிவு செய்தனர். இதன் மூலம் நோயாளிக்கு அறுவைசிகிச்சையின் போது ஏற்படக்கூடிய அபாயங்கள் பெருமளவு குறைக்கப்பட்டன.

குறிப்பாக இதயத்தின் மேல் அறையில் ஏற்படும் பாதிப்பிற்கு ‘கிரையோபலூன் அப்லேஷன்’ (குளிரூட்டும் முறை) இதயத்தின் கீழ் அறையில் ஏற்படும் பாதிப்பிற்கு ‘ரேடியோபிரீக்வென்சி அப்லேஷன்’ (வெப்ப ஆற்றல் முறை) ஆகிய சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. 3 மணி நேரத்தில் முடிவடைந்த இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை செயல்முறையின் போது அறுவை சிகிச்சைக்கான கீறல்கள் இன்றி, தொடை வழியாக மிகச்சிறிய துளை மூலம் நவீன 3D மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதயப் பாதைகள் சீரமைக்கப்பட்டன. நோயாளி விரைவாகக் குணமடைந்து அடுத்த நாளே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

Related Stories: