கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜ மாநில செய்தி தொடர்பாளர் நீக்கம் ரத்து: கட்சி, தேர்தல் பணிகளை தொடரலாம் என்று நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

 

சென்னை, ஏப்.6: விஜய்க்கு அழைப்பு விடுத்த, பாஜ மாநில செய்தி தொடர்பாளர் நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் கட்சி மற்றும் தேர்தல் பணிகளை மீண்டும் தொடரலாம் என நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழக மக்களின் நலன் காக்க, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக விஜய் இணைய வேண்டும். அவருக்கான இடத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வழங்கும் என பாஜ மாநில செய்தித் தொடர்பாளராக இருந்த ஏ.என்.எஸ். பிரசாத் அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது பாஜ வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கட்சி பொறுப்புகளில் இருந்து ஏ.என்.எஸ்.பிரசாத் அதிரடியாக நீக்கி பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்தார். பாஜ​ மாநில செய்​தித் தொடர்​பாள​ராக பதவி வகித்து வந்​தவர் ஏஎன்​எஸ் பிர​சாத், கட்​சி​யின் தேர்​தல் பணிக்​குழு​விலும் இடம் பெற்​றிருந்​தார்.

இந்த 2 பொறுப்​பு​களில் இருந்​தும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், ஏ.என்.எஸ். பிரசாத் மீண்டும் அவர் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்தின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘தமிழக பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தற்பொழுது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், அவருடைய நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. அவர் கட்சி மற்றும் தேர்தல் பணிகளை மிகவும் சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: