பொய்களை அள்ளி வீசுகிறார் துரோகத்தின் மறு உருவம் எடப்பாடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு, எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து ‘பியூஸ்’ போன சாமியாகி விட்டார் என கிண்டல்

விருதுநகர்: எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் தோல்விகளை கூட நீங்கள் எண்ணிவிடலாம். அவரது துரோகங்களை எண்ண முடியாது. துரோகத்திற்கு உருவம் கொடுத்தால் அது பழனிசாமி மட்டுமே. பொய்களை அள்ளி வீசுகிறார். எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து ‘பியூஸ்’ போன சாமியாகி விட்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்காக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் நேற்று காலை நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், திமுக வேட்பாளர்களான கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), தங்கம் தென்னரசு (திருச்சுழி), கடற்கரைராஜ் (சாத்தூர்), தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்) மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் (விருதுநகர்), காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் (சிவகாசி), இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகாலிங்கம் (ஸ்ரீவில்லிபுத்தூர்) ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆதரித்து பேசியதாவது:

தமிழகத்தில் எத்தனையோ நலத்திட்டங்கள் செய்துள்ளோம். இன்னும் செய்து தயாராக உள்ளோம். இதுபோல், சாதனைகள் எதையும் சொல்ல முடியாமல் அவதூறுகளையும், தரம் தாழ்ந்த பேச்சுகளையும் நம்பி பிரசாரம் செய்கிறார் பழனிசாமி. பழனிசாமி என்று சொன்னால் பொய், பித்தலாட்டம் என்று தான் பொருளாகும். பழனிசாமி சொன்ன பொய்களை, ஒரு புத்தகமே போடலாம். அந்த அளவுக்கு பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞரை பற்றி, பச்சை பொய் பேசிய பழனிசாமிக்கு, நான் நெல்லையில் பதிலடி கொடுத்திருக்கிறேன்.

தான் சொன்ன ஒரு பொய்யில் இருந்து தப்பிக்க, அடுத்தடுத்த பொய்களை கூச்சமே இல்லாமல் சொல்ல தொடங்கியிருக்கிறார். அவர் காமராஜருக்கு, ஜானகி, எம்ஜிஆர் ஆகியோருக்கு இடம் தர மறுத்தோம் என்று உளறி கொட்டியிருக்கிறார். சங்கி கூட்டணியில் சேர்ந்ததால், அவர்களை போலவே வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். காமராஜர் மறைந்தபோது, சொந்த மகனை போல் உடனிருந்து இறுதி நிகழ்வுகளை செய்தவர் கலைஞர். காமராஜரின் திருவுடலை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கலாம் என்று சொன்னபோது, ‘‘அவர் ஒரு கட்சிக்கு மட்டும் தலைவர் இல்லை.

எல்லோருக்குமான தலைவர், முன்னாள் முதலமைச்சர் என்பதால், ராஜாஜி மண்டபத்தில் தான் வைக்க வேண்டும்’’ என்று சொன்னவர் கலைஞர். அவரை கிண்டி காந்தி மண்டபத்தில் தகனம் செய்ய முடிவெடுத்து, நள்ளிரவில் மழையில் நனைந்தபடி அதற்கான இடத்தை தேர்வு செய்தார். முப்படை வீரர்கள் தூக்கிக் கொண்டு வந்த காமராஜரின் உடலை வாங்கி, பீரங்கி வண்டி மேல் வைத்தது கலைஞர். தகன மேடைக்கு அருகே இந்திரா காந்தியுடன் கலைஞரும் உடனிருந்தார். இது எல்லாமே வரலாறு. பழனிசாமி சொன்ன பொய் உண்மை என்றால், அந்த காலத்திலேயே இவை சர்ச்சையாகி இருக்கும்.

தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய புத்தகங்களிலேயே கலைஞரை புகழ்ந்துதான் எழுதியுள்ளனர். அதேபோல், ஜானகி எம்ஜிஆர் மறைந்த சில நாட்களிலேயே, ராமாவரம் தோட்டத்தில் இருக்கும் எம்ஜிஆர் இல்லத்தில் ஜானகி எம்ஜிஆரின் படத்தை திறந்து வைத்தவர் கலைஞர். சில காலம் மட்டுமே முதலமைச்சராக இருந்த ஜானகி எம்ஜிஆரின் படத்தை, அதிமுக தலைவர்களே கோட்டையில் மாட்டவில்லை. அவரது படத்தை 1996ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு கோட்டையில் மாட்ட சொன்னார். அந்த அளவிற்கு அவரை மதித்தார்.

முந்தாநாள் அடித்த காற்றில் முதலமைச்சராகி, மக்களால் தூக்கியெறியப்பட்ட பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியுமா? இப்போது புதிதாக இன்னொரு பொய்யை சேர்த்திருக்கிறார். அரசு ஊழியர்களை ஆசைவார்த்தை காட்டி, திமுக அரசு ஏமாற்றிவிட்டது என்று? அப்படி ஏமாற்றி இருந்தால், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் என்னை கோட்டையில் சந்தித்து, நன்றி சொல்லி எனக்கு இனிப்பு ஊட்டுவார்களா? நாம் செய்துவிட்டோம் என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல், கடுப்பில், பழனிசாமி இப்படி எல்லாம் பேசிக் கொண்டு வருகிறார்.

லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை நாங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொடுமைப்படுத்தி, கொச்சைப்படுத்தி, அவர்களுக்கு தரும் ஊதியத்தையும் இழிவுபடுத்தி பேசிய பழனிசாமிக்கு, அவர்களிடம் இருந்து, ஸ்வீட்டும் கிடைக்காது, ஓட்டும் கிடைக்காது. இதுதான் உண்மை. நம்முடைய வரிப்பணம் மொத்தத்தையும் வாங்கி, பாஜ ஆளும் வடமாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கொடுக்கிறார்கள். இதனால் ஏற்படுத்தப்படும் செயற்கையான நிதி நெருக்கடியை மீறி, இந்த ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட எல்லாவற்றையும் நாம் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.

அரசு ஊழியர்களுக்கு மட்டுமா பழனிசாமி துரோகம் செய்தார்? அவர் துரோகம் பண்ணாத தரப்பே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து உழவர்களுக்கு துரோகம், பொள்ளாச்சியில் பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்து, பெண்களுக்கு துரோகம், குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் என்று பாஜவின் எல்லா சட்டத்திற்கும் ஆதரவு கொடுத்து சிறுபான்மை சமூகத்திற்கு துரோகம், கட்சியில் உங்களை வளர்த்து விட்ட, செங்கோட்டையனுக்கு துரோகம், பதவி கொடுத்த சசிகலா, டிடிவி.தினகரனுக்கும் துரோகம்,

ஓ.பன்னீர்செல்வத்திற்கு துரோகம், உங்கள் ஆட்சியை காப்பாற்றிய முன்னாள் சட்டப் பேரவையின் தலைவர் தனபாலுக்கு சீட்டு கொடுக்காமல் துரோகம், எல்லாவற்றிற்கும் மேல், மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்பட்ட பாஜவை எதிர்த்த ஜெயலலிதாவுக்கு, அதே பாஜவுடன் கூட்டணி வைத்து துரோகம். பழனிசாமியின் தேர்தல் தோல்விகளை கூட நீங்கள் எண்ணிவிடலாம். துரோகங்களை எண்ண முடியாது. துரோகத்திற்கு உருவம் கொடுத்தால் அது பழனிசாமி மட்டுமே.

இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ரூ.8000 கூப்பனை பற்றித்தான் எல்லோரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர்தான் சோகமாக இருக்கிறார். அவர்தான் பழனிசாமி. இல்லத்தரசி திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு, இதில் திமுக காரர்கள் கமிஷன் அடிப்பார்கள் என்று அடிப்படை காரணமின்றி புலம்பிக் கொண்டிருக்கிறார். பணத்திற்கு பதிலாக கூப்பன் தருகிறோம். மக்கள் கடையில் கொடுத்து பொருளை வாங்கிக் கொள்ளப் போகிறார்கள்.

இதில் எங்கே ஊழலும், கமிஷனும் வந்தது? தன்னைப் போன்றே பழனிசாமி எல்லோரையும் நினைத்து விட்டார். எது எப்படியோ, இல்லத்தரசி அறிவிப்பால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இப்போது பியூஸ் போன சாமி ஆகிவிட்டார்.  வாக்குறுதியை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், திமுக கொடுக்கும் வாக்குறுதியைதான் மக்கள் நம்புகிறார்கள்.

நாம் இப்போது போராடுவது, திமுக வெற்றிக்காக மட்டுமல்ல, ஒரு கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக என்பதை மறந்துவிடக் கூடாது. தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, விருதுநகர் மக்கள் அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

* அன்று விஜய்காந்துக்கு… இன்று அவரது மகனுக்கு… பாடல் பாடி முதல்வர் பிரசாரம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘விஜயபிரபாகரனுக்கு வாக்கு கேட்கும்போது, என்னுடைய நினைவுகள் கடந்த காலத்தை ஞாபகப்படுத்துகின்றன. விஜயகாந்த், ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற திரைப்படத்தில் வேட்பாளராக நடித்தார். அதில் நான், ஒரு கவுரவ வேடமாக ஒரு பாட்டு பாடி வருவேன். வேட்பாளராக நிற்கும் விஜயகாந்தை ஆதரித்து நான் பாட்டு பாடுவேன். அந்தப் பாட்டுகூட என் மனதில் ஆழமாக இருக்கிறது.

கலைஞர் எழுதிய பாட்டுதான். “ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு. நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு” என்று அந்தப் பாடல் இருக்கும். அப்போதே, விஜய பிரபாகரனின் அப்பாவிற்கு ஓட்டு கேட்டு திரைப்படத்தில் நடித்தேன். இன்று அவரின் மகனுக்கு, இன்றைக்கு முதலமைச்சராக நேரடியாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்’’ என்றார்.

* ‘விசுவாசத்திற்கு கட்டப்பா துரோகத்திற்கு பழனிசாமி’
முதல்வர் பேசுகையில், ‘‘பாகுபலி படத்தில் சத்யராஜை பார்த்து சொல்வது மாதிரி ஒரு டயலாக் வரும். “விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா” அப்படி ஒரு வசனம் இருக்கும். அதுபோல், துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது பழனிசாமிதான். இப்படி, தன்னை நம்பிய அத்தனை பேருக்கும் அல்வா கொடுத்த பழனிசாமி பேசுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்’’ என்றார்.

Related Stories: