திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை, அம்பேத்கர் சிலை அருகே நேற்று சிவகங்கை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நடிகர் கருணாஸை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஒன்றிய அரசு தமிழ்நாடு கேட்கும் நிதியை வழங்குவதில்லை. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இல்லை. தேர்தல் அறிவித்தவுடன் மோடி, அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருகின்றனர். ஆனால் திட்டங்கள் எதுவும் வரவில்லை.
நிதி வரவில்லை. இந்த சட்டமன்ற தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் நடைபெறும் தேர்தல் என நம்முடைய தலைவர் கூறுகிறார். இதில் தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும். பாஜ தனியாக வந்தால் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால், அதிமுக என்ற அடிமை கூட்டத்தை கூட்டிக் கொண்டு அவர்களுடைய போர்வையில் பாஜ வருகிறது.
தற்போது அதிமுகவின் நிலை என்ன? மோடிக்கு ஏற்ற அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவிலேயே முரட்டு நம்பர் ஒன் அடிமை எடப்பாடி பழனிசாமி தான். அதனால் தான் அதிமுகவில் இருக்கும் சீனியர் தலைவர்கள் எல்லாம் திமுகவை நோக்கி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நம்மை நோக்கி வந்து விட்டார். எடப்பாடி பழனிசாமி கடந்த தேர்தலில் அதிமுகவை பாஜவிற்கு வாடகைக்கு விட்டார். இந்த தேர்தலில் பாஜவிடம் அதிமுகவை விற்று விட்டார்.
எடப்பாடி பழனிசாமியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை கைப்பற்றி டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி நடத்த பாஜ திட்டமிடுகிறது. அதை நாம் அனுமதிக்க கூடாது. இவ்வாறு கூறினார். திருப்புத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனை ஆதரித்து, சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘அதிமுக ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான் லேப்டாப் திட்டம் என்கின்றனர். ஆமாம் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான்.
அதிமுக ஆட்சியில் லேப்டாப் யாருக்காக கொடுத்தார்கள் தெரியுமா? பள்ளி மாணவர்களுக்கு கொடுத்தார்கள். அதையும் 2019ல் நிறுத்தினார்கள். கல்லூரி படிக்கும் மாணவருக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார்.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு 10 தோல்வி கொடுத்து இருக்கிறோம். வரும் இந்த சட்டமன்ற தேர்தலில் 10 தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி வீட்டிற்கு அனுப்ப வேண்டும். வீட்டுக்கு அனுப்பும் நேரம் இது. செய்து காட்ட வேண்டும். மோடி, எடப்பாடிக்கு இங்கு இடமில்லை என சட்டமன்ற தேர்தலில் நிரூபிக்க வேண்டும்’’ என்று பேசினார்.
