தென்காசி: வரும் தேர்தலிலும் அதிமுக-பாஜகவுக்கு படுதோல்வியைத்தான் மக்கள் பரிசாக தர வேண்டும். டப்பா என்ஜினை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கவே கூடாது. தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்’ என சங்கரன்கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையில் மேலும் முதலமைச்சர் பேசியதாவது; “நாங்கள் கொள்கை கூட்டணியோடு வந்து வாக்கு கேட்கிறோம்; பாஜகவும் அதிமுகவும் உங்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள். தமிழ்நாட்டுக்கு என்னென்ன நன்மைகள் செய்துள்ளார்கள் என அதிமுக-பாஜகவினால் சொல்ல முடியுதா?. சாதனைகளை சொல்ல முடியாததால், அதிமுக – பாஜக கூட்டணி பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகிறது. எந்த கொள்கையை அடிப்படையாக வைத்து கூட்டணி என்று அதிமுக – பாஜக கூட்டணி சொல்ல முடியுமா?.
எடப்பாடி பழனிசாமியை அவர்களது கூட்டணியில் உள்ள சில கட்சியினர் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மறுக்கின்றனர். பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதற்கு தூக்கில் தொங்குவேன் என்று டிடிவி தினகரன் கூறினார். எடப்பாடி பழனிசாமி மீது அன்புமணி, தினகரன் வைத்த விமர்சனங்கள் ஏராளம். ஊழலால் ஒன்றிணைந்த எடப்பாடி பழனிசாமியும் அவர்களது கூட்டணி கட்சிகளும் டப்பா என்ஜினுடன் இணைந்துள்ளார்கள்.
என்.டி.ஏ. கூட்டணியில் உள்ளவர்கள் ஊழலால் தங்களது குடுமியை அமித்ஷாவிடம் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நலனுக்காக திட்டங்களை செய்யும் கூட்டணி திமுக கூட்டணி. நாம் செய்த சாதனைகளை புள்ளிவிவரங்களோடு சொல்ல முடியும். ஆலங்குளம், சிவகரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சொன்னதை செய்த கலைஞரின் மகனாய் உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்ல, சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளேன். மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயன்ற அதிமுக, பாஜக சதியை தெரிந்துகொண்டு முன்கூட்டியே ரூ.5,000 கொடுத்தோம். அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தையும் நிறைவேற்றி உள்ளோம். திமுக செய்த சாதனைகளை நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 வழங்கும் கூப்பன் திட்டம் செயல்படுத்தப்படும். இல்லத்தரசி திட்டத்தின் கீழ் என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பது பெண்களின் சாய்ஸ்தான். இல்லத்தரசி திட்டத்தினால் பொருளாதாரம் உயரும் என்பதால் வணிகர்களும் வரவேற்கிறார்கள். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்பு செட்டுகள் வழங்கப்படும். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும்.
சொன்னதை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன். தங்களின் சாதனை என்று பழனிசாமியால் எதையாவது பட்டியலிட முடியுமா?. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதிநிலையை சீராக்கி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். தென் தமிழ்நாட்டில் ஏரோ பார்க் அமைக்கப்படும் என்று பழனிசாமி சொன்னார், வந்ததா?. குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்போன் தருவோம் என பழனிசாமி கூறினார், தந்தாரா?. 10 ஆண்டு கால ஆட்சியில் எல்லா துறைகளையும் பழுகுழியில் தள்ளியவர்தான் எடப்பாடி.
ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்குகூட மூடுவிழா நடத்தியவர்தான் எடப்பாடி. வரும் தேர்தலிலும் அதிமுக-பாஜகவுக்கு படுதோல்வியைத்தான் மக்கள் பரிசாக தர வேண்டும். டப்பா என்ஜினை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கவே கூடாது. கேஸ் சிலிண்டருக்காக மக்களை காக்க வைத்துள்ளார் பிரதமர் மோடி. மோடி ஜி..! Where is LPG? என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் அமைதியாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் இந்தி திணிக்கும் வேலையை பாஜக செய்கிறது.
மீண்டும் மீண்டும் இந்தியை திணிக்கும் வேலையை செய்து தனக்கு தானே பாஜக குழியை தோண்டிக் கொள்கிறது. இந்தி திணிப்பை ஏற்பதற்கும் கல்வி தரத்துக்கும் என்ன சம்பந்தம்?. தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர் என பேசி, நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டவர்தான் இந்த பிரதான். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என தமிழ்நாட்டில் மோடி, அமித் ஷாவால் பரப்புரை செய்ய முடியுமா?” என பேசினார்.
