கொல்கத்தா: 19வது சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. டாஸ் வென்ற கேகேஆர் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன் குவித்தது. அதிகபட்சமாக கிளாசென் 52 (35பந்து), அபிஷேக் சர்மா 48(21பந்து), டிராவிஸ் ஹெட் 46 (21பந்து), நிதிஷ்குமார் ரெட்டி 39 ரன் (24 பந்து) அடித்தனர். கேகேஆர் பவுலிங்கில் முசராபானி 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் களம் இறங்கிய கேகேஆர் அணியில் பின் ஆலன் 7 பந்தில் 28, ரகுவன்ஷி 52, ரிங்கு சிங் 35 ரன் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 16 ஓவரில் 161 ரன்னுக்கு அந்த அணி ஆல்அவுட் ஆனது. இதனால் 65 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றிபெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் ஜெயதேவ் உனத்கட் 3, நிதிஷ்குமார், ஈஷான் மலிங்கா தலா 2 விக்கெட் எடுத்தனர். நிதிஷ்குமார் ரெட்டி ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் சன்ரைசர்ஸ் கேப்டன் இஷான்கிஷன் கூறியதாவது: ”நான் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை, ஆனால் அணி அர்ப்பணிப்புடன் இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கேட்ட ஆற்றலை அனைவரும் வெளிப்படுத்தினர்.
ஆடுகளம் பேட்டிங்கிற்கு எளிதாக இல்லை. ஆனால் ஹெட் மற்றும் அபிஷேக் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிளாசெனும் இறுதியில் சிறப்பாக செயல்பட்டார். ஃபின் ஆலன் அபாயகரமானவர் என்பது தெரியும், ஆனால் ஹர்ஷ் வீசிய அந்தப் பந்தில், அந்த விக்கெட் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். ஷிவாங்கின் கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தது. ரிங்கு போன்ற ஒருவருக்கு எதிராக அவர் மன உறுதியுடன் பந்துவீசியதை பார்த்தீர்கள். ஃபீல்டிங் ஒரு முக்கியமான பகுதி. அணியாகச் சேர்ந்து இதில் கவனம் செலுத்துவோம், என்றார்.
ஆட்டநாயகன் நிதிஷ்குமார் கூறியதாவது: இதுபோன்று ஆடுவதை தான் நான் நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அது சரியான நேரத்தில் வந்தது. என் பந்துவீச்சும்கூட எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. கடந்த சீசன் எனக்குச் சாதகமாக அமையாததாலும், என்னால் பந்துவீச முடியாததாலும் மனவருத்தம் இருந்தது. நான் எனது பந்துவீச்சில் மிகவும் கடினமாக உழைத்தேன், அதன் பலனை இப்போது காண்கிறேன். அது உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகிறது. பயிற்சியாளர்களுக்கும் பிசியோதெரபிஸ்டுகளுக்கும் நன்றி என்றார்.
பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை;
தோல்வி குறித்து கேகேஆர் கேப்டன் ரகானே கூறியதாவது: பவுலிங்கில் ஆரம்பத்தில் ரன்களை கொடுத்தாலும் சிறப்பாக மீண்டு வந்தோம். பேட்டிங்கில், பெரிய இலக்கைத் துரத்தும்போது, பார்ட்னர்ஷிப் அவசியம், ஆனால் அது எங்களுக்குக் கிடைக்கவில்லை முதல் இன்னிங்சை விட 2வது இன்னிங்சில் பந்து அதிகமாக நின்று வந்தது. ஆனால், சாக்குப்போக்குகள் சொல்லவில்லை. சன்ரைசர்ஸ் மெதுவான பந்துகளை நன்றாகப் பயன்படுத்தியது. சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அணியை மேம்படுத்துவது பற்றியும், கூடுதலாக பேட்ஸ்மேன் தேவையா என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும், என்றார்.
