சில்லி பாய்ன்ட்…

* இந்தியா-ஜிம்பாப்வே 3 டி20களில் மோதல்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஜூலை மாதம், ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், இந்திய அணி ஆடவுள்ள முதல் டி20 தொடர் இது. இது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வரும் ஜூலை 23, 25, 26 ஆகிய நாட்களில் நடைபெறும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

* ஆசிய குத்து சண்டை காலிறுதியில் சச்சின்
உலான்பாடர்: மங்கோலியாவின் உலான்பாடர் நகரில் நடக்கும் ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளின் 3ம் நாளான நேற்று 60 கிலோ எடைப் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீரர் சச்சின், மங்கோலியாவின் புயன்தலாய் பயார்குவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அவர், காலிறுதியில் சீன தைபே வீரர் செங் வெ லீ உடன் மோதுவார். மற்றொரு போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் விஸ்வநாத் சுரேஷ், கிர்கிஸ்தான் வீரர் பெக்ஸாட் எர்கெஷோவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர், கஜகஸ்தானை சேர்ந்த நடப்பு உலக சாம்பியன் சன்ஸார் தாஷ்கென்பே உடன் மோதுவார்.

* உலக கோப்பைக்கு ஈராக் அணி தகுதி
மான்டெரே: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றில் பொலிவியா – ஈராக் அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஈராக் 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதற்கான கடைசி இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடைசியாக கடந்த 1986ல் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்ற ஈராக், 40 ஆண்டுக்கு பின் முதல் முறையாக தற்போது மீண்டும் தகுதி பெற்று அப்போட்டிகளில் ஆடவுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடந்து வரும் நிலையில் பல்வேறு தடைகளை தாண்டி, தகுதிச் சுற்றுப் போட்டியில் ஈராக் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: