நியூசண்டிகர்: 19வது சீசன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் நேற்றிரவு நடந்த 4வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 39, ஜோஸ் பட்லர் 38 ரன் அடித்தனர். பஞ்சாப் பவுலிங்கில் விஜய்குமார் வைஷாக் 3, யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் இம்பாக்ட் வீரர் பிரியான்ஷ் ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 37 (24பந்து), கேப்டன் ஸ்ரேயாஸ் 18, நேஹல் வதேரா 3, ஷஷாங்க் சிங் 4, மார்கஸ் ஸ்டோனிஸ் 0, மார்கோ ஜான்சன் 9 ரன்னில் அவுட் ஆகினர். நாட் அவுட்டாக கூப்பர் கனோலி 44 பந்தில் 5 பவுண்டரி,5 சிக்சருடன் 72 ரன், சேவியர் பார்ட்லெட் 5 பந்தில் 11 ரன் எடுத்தனர். 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்த பஞ்சாப் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கூப்பர் கனோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வெற்றிக்கு பின் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறியதாவது: கடந்த சீசனை போலவே நாங்கள் நன்றாக இருக்கிறோம். நான்எதையும் கெடுத்துவிட விரும்பவில்லை. கூப்பர் கனோலி ஆடிய சில ஷாட்டுகள் , குறிப்பாக ரஷித்கான் பந்துவீச்சில் அவர் ஆடிய ஷாட், பார்ப்பதற்கு நம்பமுடியாததாக இருந்தது. திடீரென நாங்கள் அடுத்தடுத்து 2 விக்கெட் இழந்தோம். ஐபிஎல்-ல் இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்தான். நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். கூப்பர் அங்கே இருந்தார், அவர் நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தார். பவுலிங்கில் வைஷாக் கடந்த சீசனில் வெளிப்படுத்திய ஃபார்மை இந்த சீசனிலும் தொடர்கிறார். அவர் பெரிய போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர் என்றார். பஞ்சாப் தனது அடுத்த போட்டியில் வரும் 3ம் தேதி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராகவும், குஜராத் டைட்டன்ஸ் 4ம் தேதி அகமதாபாத்தில் ராஜஸ்தான் அணியுடனும் மோத உள்ளன.
இதைதான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்!
ஆட்டநாயகன் கூப்பர் கூறுகையில், ”சில உலகத் தரம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடும் அனுபவத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இன்றிரவு இந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சி. நான் பெரும்பாலும் நிதானமாக விளையாடுபவன். அதிக பெரிய சிக்சர்களை அடிப்பதில்லை. ரிக்கி பாண்டிங்குடன்(பஞ்சாப் பயிற்சியாளர்) இணைந்து பணியாற்றுவது சிறப்பாக உள்ளது. சேவியருடன் இணைந்து இந்த வெற்றியைப் பெற்றது மகிழ்ச்சி, தொடரின் மீதமுள்ள போட்டிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நான் ரஷித்கானுக்கு எதிராக ஆடியது இதுவே முதல் முறை. இந்த வெற்றியைப் பெற்றது மகிழ்ச்சி.” என்றார்.
யார் இந்த கூப்பர் கனோலி?
22 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கூப்பர் கனோலி பேட்டிங் ஆல்ரவுண்டர். ஐபிஎல்லில் அறிமுகமாக முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.ஆஸி. அணிக்காக ஒரு டெஸ்ட் 8 ஒன்டே மற்றும் 11 டி.20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். ரிக்கி பாண்டிங் இவரை ஐபிஎல்லில் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தார். நேற்று ரஷித்கான் பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களை விளாசினார், அதில் ஒரு சிக்சரை 103 மீட்டர் தூரத்திற்கு அடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரஷித் கான் ஸ்தம்பித்துப் போனார். இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு கூப்பர் முக்கிய வீரராக திகழ்வார் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
175 ரன் எடுத்திருந்தால் வேறுவிதமா இருந்திருக்கும்…
தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது: ”நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம் என்று நினைக்கிறேன். ஆனால் பேட்டிங்கில் கடைசி 5,6 ஓவர்களில் எங்களால் சிறப்பாக ஆட முடியவில்லை. இது 200 ரன்கள் எடுக்கக்கூடிய பிட்ச் அல்ல ஆனால் 175 ரன்கள் எடுத்திருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம், கடைசி 5 ஓவர்களில் எங்களால் சிறப்பாக ஆட முடியவில்லை. நான் பிரசித்தை முன்னதாகவே பந்துவீச வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் இறுதிவரை ஆட்டத்தில் இருந்தோம். அசோக் சர்மா நன்றாகப் பந்துவீசினார். அவர் மேலும் விளையாடி அனுபவம் பெறும்போது, எங்களுக்கு மதிப்புமிக்கவராக இருப்பார்.” என்றார்.
