காங்கயம், மார்ச் 27: காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை நத்தகாடையூர் அருகே தனியார் கல்லூரி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி (40) என்பவர் ஓட்டிவந்த காரை நிறுத்தி நிலை கண்காணிப்பாளர் குழு அலுவலர் முருகன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரிடம் ரூ.82,900 இருப்பது தெரிய வந்தது. பழனியில் பள்ளி பயிலும் மகனின் பள்ளி கட்டணத்திற்கு பணம் கட்டுவதற்கு எடுத்து செல்வதாக அவர் கூறினார். இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால் அத்தொகை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல் ஆகியோரிடம் ஒப்படைந்தனர்.
