வரத்து அதிகரிப்பால் முருங்கை விலை சரிவு

போச்சம்பள்ளி, ஏப். 3: போச்சம்பள்ளியில் விளைச்சல் அதிகரித்து முருங்கைக்காய் விலை சரிந்து கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் முருங்கைக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளையும் முருங்கைக்காய்களை உள்ளூர் சந்தைகளில், விவசாயிகளிடம் இருந்து வாங்கி, வியாபாரிகள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வருகின்றனர். முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் ஒருசில விவசாயிகள் வேறு வழியின்றி, தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இலவசமாக வழங்கினர்.

மேலும் வியாபாரிகள் காய்கறிகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முருங்கைக்காய்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், `கடந்த காலங்களில் முருங்கை விளைச்சல் கடுமையாக பாதித்ததால், விலை அதிகரித்து கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் நேரில் விவசாயிகளிடம் விலை பேசி வாங்கி சென்று, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். முருங்கை விளைச்சல் அதிகரித்ததால், 10 கிலோ அறுவடை செய்யப்பட்ட மரத்தில், 50 கிலோ வரை விளைச்சல் கிடைத்தது. இதனால் முருங்கைகாயை வாங்க வியாபாரிகள் முன் வராமல், நாங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அருகில் உள்ளவர்களுக்கு வழங்கி வருகிறோம், ’ என்றனர்.

Related Stories: